பக்கம்:வாழ்க்கை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vii

கிறிஸ்தவ சபையில் சேர்ந்து பெயரளவில் கிறிஸ்தவராகயிருப்பதைவிட, கிறிஸ்துவின் உண்மையான அடியாராயிருக்கவே டால்ஸ்டாய் விரும்பினார். சர்ச்சுக்கு வெளியில் இருந்துகொண்டே அவர் சமய ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அவருடைய ஆராய்ச்சிகளையும், கொள்கையும் கண்டு ரஷ்ய சர்ச் அவரைப் ‘பிரஷ்டம்’ செய்து ஒதுக்கிவிட்டது.

அக்காலத்தில் டால்ஸ்டாயின் இலக்கியத்தை உலகில் பல நாடுகளும் போற்றி வந்தன. அவர் தமது ஐம்பதாவது வயதில் (1877-இல்) சமய ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கிப் பத்து ஆண்டுகளாக அதிலேயே ஈடுபட்டிருந்தார். அந்த ஆராய்ச்சியன் விளைவாக அவர் எழுதிய கட்டுரைகளில் ஒன்று இந்த ‘வாழ்க்கை’.

இந் நூலை ரஷ்ய நாட்டில் வெளியிடக் கூடாது என்று அக்காலத்தில் ஜார் சக்கரவர்த்தியின் அரசாங்கம் தடை செய்து விட்டது. பல ஆண்டுகட்குப் பின் இது முதன் முதலாக சுவிட்ஜர்லாந்து தேசத்தில் வெளியிடப் பெற்றது. பின்னர் பிரெஞ்சு மொழியிலும், ஆங்கிலம் முதலிய மொழிகளிலும் வெளி வந்தது. இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு ‘ப்ரீ ஏஜ் பிரஸ்’ (Free Age Press) வெளியிட்ட நூலிலிருந்து சுருக்கி எழுதப் பெற்றது.

இந் நூலின் ஆரம்பத்தில் ஆசிரியர் ‘வாழ்க்கை என்பது என்ன?’ என்ற கேள்விக்குப் பதில் கூறுகிறார். நூலின் மூடிவில், மரணத்தைப் பற்றி ஆராய்ந்து, ‘மரணம் என்பது என்ன?’ என்பதை விளக்கியுள்ளார். இந் நூல் ஆசிரியரின் அரிய ஆராய்ச்சிகளில் ஒன்று. அவருடைய மற்ற நூல்களுக்கும், அவருடைய வாழ்க்கைக்கும் இதை ஒரு திறவுகோல் என்று சொல்லலாம். இந் நூல் சொல்லுக்குச் சொல்லாக மொழி பெயர்க்கப் பெறவில்லை. ஆசிரியரின் கருத்துக்களையே சுருக்கி எழுதியுள்ளேன். எவ்வளவு தெளிவாக எழுதினாலும், விஷயம் பெரிதாகையால், ஒவ்வொரு வரியையும் படித்த பிறகு சிந்தனை செய்து பார்த்தால்தான் பொருள் விளங்கும்.

திருநெல்வேலி
25-3-'56
ப ராமஸ்வாமி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/5&oldid=1122530" இலிருந்து மீள்விக்கப்பட்டது