பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 யூனிஸத்தை ஏற்படுத்த முடியுமென்பதை லெனின் அழுத்தம் திருத்தமாக விளக்கிச் செயலிலும் செய்து காட்டியுள்ளார். சீனாவில் ஏற்பட்டிருப்பது பாட்டாளி மக்களின் சர்வாதிகாரம் அன்று; முதலாளிவர்க்கத்தினர், நடுத்தர வகுப்பினர், குடியானவர், பாட்டாளிகளைச் சேர்த்து அமைத்துள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகாரமாகும். இந்த முறையினால் நாளடைவில் மற்ற வகுப்பாரிடையிலும் பூரணமான கம்யூனிஸம் பரவிவிடும் என்று மாஸே-துங் புது வழி வகுத்துள்ளார். மேலும் ரஷ்யாவில் ‘பூர்ஷூவாக்க’ளின் எதிர்ப்பு அதிகமிருந்ததால் பாட்டாளி மக்களின் சர்வாதிகாரம் அவசியமாயிற்று என்றும், சீனாவில் பூர்ஷூவாக்கள் சக்தி குன்றிக் கிடப்பதால், அது அவசியமில்லை என்றும் சீனக் கம்யூனிஸ்டுகள் விளக்கம் கூறினர். ‘பாட்டாளி மக்களின் சர்வாதிகார’த்திற்குப் பதிலாகச் சீனாவில் ‘பாட்டாளிகளை முதன்மையாய்க் கொண்ட சர்வாதிகாரம்’ ஏற்பட்டிருப்பதாக அவர்கள் பிரசாரம் செய்தனர். முன்னால் கம்யூனிஸம் என்பது கார்ல் மார்க்ஸ் கூறியது மட்டுமன்று லெனின் கூறியுள்ள விளக்கத்தையும் அத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமன்று ; ஸ்டாலின் கருத்துப்படி அது மாஸ்கோவின் அங்கீகார முத்திரையையும் பெற வேண்டும். இப்பொழுது அந்த நிலை மாறிவிட்டது. இனி பீகிங்கின் முத்திரை பெறவேண்டும்.

கம்யூனிஸமும் தேசிய நலன்களும்

யுகோஸ்லேவிய நாட்டுக் கம்யூனிஸ்ட் அதிபரான டிட்டோ ஸோவியத் முறையை எதிர்த்துத் தமது நாட்டிற்கு ஏற்ற முறையில் அதை மாற்றியமைத்துக் கொண்டார். இதற்காக ரஷ்யாவும், சீனாவும் அவரை

191