பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யாக்குகளும் போனிக் குதிரைகளும் வளர்க்கப் பெறுகின்றன. காடுகளில் யானைகளும் ஏராளமாயிருக்கின்றன.

திபேத்துடன் பூட்டானுக்கு 300 மைலுக்கு மேற்பட்ட எல்லையுள்ளது. இந்த எல்லை இமயமலைத் தொடரின் கொடுமுடிகளைத் தொடர்ந்து பரம்பரையாக வழக்கத்தில் இருந்துவருவது. ஆனால் சீனத் தேசப்படங்களில் பூட்டானில் ஒரு பெரிய பகுதி வடக்கிலுள்ள திபேத்துடன் சேர்ந்ததாகக் காட்டப் பெற்றுள்ளது. இப்படித் தவறாகச் சேர்க்கப்பட்டிருந்ததைச் சீனாவுக்கு எடுத்துக்காட்டும் உரிமையும் கடமையும் இந்திய அரசாங்கத்தினுடையவை. ஏனெனில் பூட்டானின் வெளி விவகாரங்களில் அதற்கே பொறுப்புண்டு. பூட்டான் அரசாங்கத்தின் சார்பில் இந்தியா முன்பே பல பிரசினைகளைச் சீன சர்க்காரிடம் தெரிவித்தும் வந்திருக்கிறது.

1960, ஏப்ரல் மாதம் சீனப் பிரதமர் சூ என்-லாய் புது டில்லிக்கு வந்து, நேரு அவர்களிடம் ஆறு நாட்களாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுதே எல்லைப் பிரசினைகளை முடிவு செய்ய முடியாமற்போனதால், அவைகளைப் பற்றி ஆராய்ந்து, விவாதித்து அறிவிப்பதற்காக இந்திய அதிகாரிகளும் சீன அதிகாரிகளும் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி பீகிங்கிலும், டில்லியிலும் இரு பக்கத்து அதிகாரிகளும் சந்தித்துப் பேசினர். அந்தப் பேச்சிலிருந்து இந்தியநாட்டில் 50 ஆயிரம் சதுர மைலுக்கும் மேற்பட்ட பிரதேசங்களைச் சீன தனக்குரியவை என்று கோரியது தெளிவாகத் தெரிந்தது. தவிரவும் இந்தியாவின் எல்லைகளைப் பற்றிப் பேசுகையில், நம் அதிகாரிகள் சிக்கிம், பூட்டான் இராஜ்யங்களின் எல்லைகளைப் பற்றியும் எடுத்துரைக்க

26