பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் தன் செல்வாக்கைப் பரப்பிக்கொண்டு, அதுவே போதுமென்று ஒதுங்கி வாழ முடியுமா ?

ஸோவியத் ரஷ்யாவின் நிலப்பரப்பு ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பரந்திருக்கின்றது. அது மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து வாழ்வது நலமா, அல்லது சீனாவுடன் சேர்ந்து வாழ்வது நலமா என்ற பிரசினை 1949-க்குப் பின் தோன்றிவிட்டது. கம்யூனிஸ்ட் சீனாவைக் கட்டியிழுப்பதைவிட மேலை நாடுகளைச் சரிக்கட்டிக் கொள்வதுதான் எளிது என்பதை ஸோவியத் தலைவர்கள் விரைவிலே தெரிந்து கொண்டார்கள். அதனால்தான் மேலை நாடுகளின் பிரசினைகளை விரைவில் முடித்துக்கொண்டு, சமாதான வாழ்வுக்கு அடிகோலுவதில் குருஷ்சேவ் இடைவிடாது முயன்று வந்தார். சீனா கம்யூனிஸ்ட் தோழன் என்ற முறையில் அதற்கும் உதவி செய்ய வேண்டியதுதான்; ஆனால் அதையே நம்பி நெடுந்துாரம் காலை விட்டுக்கொண்டு விழிக்கக்கூடாது என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.

சீனாவும் ரஷ்யத் தலைவர்களின் போக்கை உணராமலில்லை. வெளிப்படையாக இரு நாடுகளும் எவ்வளவு நெருங்கிய சகோதரர்களாயிருந்தாலும், அடிப்படையான வேற்றுமைகளை இரண்டும் தெரிந்திருக்கின்றன. வெளியில் தோழமை, உள்ளுறப் போட்டி. இந்தப் போட்டி காரணமாகவே மாஸே-துங் சீனாவில் திடீரென்று விவசாயக் கம்யூன்களை அமைக்க ஏற்பாடு செய்தார். 40 ஆண்டுகளாக ரஷ்யாவே செய்து முடிக்காத கம்யூன் அமைப்பைச் சீனா முன்னதாகச் செய்து காட்டவேண்டும் என்று அவர் முனைந்தார். பல காரணங்களால் அதில் அவர் வெற்றி பெற முடியவில்லை. குடியானவர்கள் ‘கம்யூன்க’ளில் சிரத்தை

194