பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ராய்த் திகழ்ந்து, ‘இரும்பு மனிதர்’ என்று புகழ்பெற்ற ஸர்தார் வல்லபாய் பட்டேலின் பேச்சைப் போல் ஒலிக்கின்றன. முன்னால் காந்திஜி சிறையிலே தவம் செய்து கொண்டிருக்கையில், முன்னதாகச் சிறையிலிருந்து வெளிவந்த வல்லபாய், சபர்மதி நதிக் கரையிலே கூடியிருந்த மக்களைப் பார்த்து, ‘காந்திஜி சிறையிலிருக்கையில் நாம் உண்ணும் உணவு மலம், நாம் படுக்கும் படுக்கை சுடுகாட்டில் அடுக்கிய காஷ்டம்!’ என்று பேசினார். ராஜன் பாபுவின் பேச்சு அதை நினைவுறுத்துகின்றது. திபேத்தையும் சீன வெறியர்களிடமிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று ராஜேந்திரர் நினைவுறுத்தியது குறிப்பிடத் தக்கதாகும்.

இமயமால்வரையின் எல்லைப்புறங்களில் இந்தியப் படைகள் அடைந்து வந்த தோல்விகள் நாடு முழுவதையுமே குலுக்கிவிட்டன. தலைவர்களும், படிப்பாளிகளும், மக்களும் கொதிப்படைந்தனர். உலக நாடுகளிடையே இந்தியா வகித்து வந்த உயர்ந்த நிலையை எண்ணி மயங்கியிருந்த மக்கள், எங்கோ, ஏதோ, மறைந்திருந்த பெருங்குறை நம் மானத்தை வாங்கி விட்டது என்பதை உணர்ந்தனர். நாட்டின் பாதுகாப்புக்குரிய அமைப்பிலேயே அக்குறை இருப்பதாகப் பலரும் கண்டிக்க முன்வந்தனர். வெறுப்பு அனைத்தும் முக்கியமாகப் பாதுகாப்பு மந்திரியாயிருந்த திரு. வி. கே. கிருஷ்ண மேனனை நோக்கித் திரும்பியது. பார்லிமென்டில் மிகப் பெரும்பான்மைக் கட்சியாக விளங்கிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பலரும் மேனனைக் கண்டிக்க முற்பட்டனர். பிரதம மந்திரி அக்டோபர் 31-ந் தேதியே மேனனைப் பாதுகாப்பு மந்திரிப் பதவியிலிருந்து மாற்றி, தற்காப்புத் தளவாட உற்பத்தி மந்திரியாக நியமித்துவிட்டார். பாதுகாப்புப் பொறுப்பையும் 73 வயதான நேருஜி

103