பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு மல்லர்கள்

33


 "அக்காள்! சுற்றிலும் பார்த்து உன் கண்ணுக்கு ஏதாவது புலப்படுகிறதா என்று சொல்லு!" என்று கேட்டாள், ஊனாக்.

"அட, பாவமே ! மிகப்பெரிய அசுரன் ஒருவன் அல்லவா டங்கன்னாலிருந்து வருகிறான்!" என்றாள், கிரானுவா.

"அதுதான் விஷயம்! அந்த அசுரன்தான் குகுல்லின் ! அவன் என் கணவன் மக்கெளலின் உடலைப் பதம் பார்க்க வருகிறான். நாம் என்ன செய்யலாம்?”

"நான் அவனைக் குல்லமோருக்கு அழைத்து இங்கே சிறிது நேரம் தங்கும்படி செய்கிறேன். அதற்குள் நீங்கள் வேண்டும் யோசனை செய்து திட்டம் தயாரியுங்கள் ! என்னால் முடிந்தவரை நான் அந்த அசுரனைக் கவனித்துக் கொள்கிறேன்."

பிறகு அவள் மலையின் உச்சியில் பெருந்தீயை வளர்த்துப் புகை உயரே கிளம்பிச் செல்லும்படி செய்தாள். அங்கிருந்துகொண்டே வாயால் மூன்று முறை சீட்டியடித்தாள். அந்த ஒலியைக் கேட்டு குகுல்லின் தன்னைக் குல்லமோருக்கு யாரோ அழைப்பதாகத் தெரிந்து கொண்டான். பழங்காலத்தில் விருந்தினர் வந்து தங்கலாமென்பதற்கு அடையாளமாக மூன்று முறை சீழ்க்கையடிப்பது வழக்கம்.

இடையில் மக்கெளல் என்ன செய்வதென்று தெரியாமல் மிகவும் கவலையடைந்தான். அவன் வீரன்தான். ஆனால், அசுரனுக்கு எதிராக அவனுடைய வீரமும் பலமும் என்ன செய்ய முடியும்? பூகம்பமுண்டாக்கி, இடியை எட்டிப் பிடித்து நிறுத்துபவனை மற்போரில் எப்படித் தோற்கடிக்க முடியும்? அவனை எப்படித் தாக்குவது என்பதும் தெரியவில்லை. ஆகவே, அவனை எதிர்த்து நிற்காமலே காரியத்தை முடிக்க வேண்டுமென்று மக்கெளல் முடிவு செய்தான்.

அவன், மனைவியைப் பார்த்து, "ஊனாக், ஊனாக், நீதான் இதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும். உன்னுடைய கற்பனா சக்தியெல்லாம் எங்கே போய்விட்டது? முயலை அடிப்பது போல அவன் உன் கண்முன்பே என்னை