பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

இறுமாப்புள்ள இளவரசி


"இன்று உங்களுக்கு நல்ல இலாபம் கிடைக்கும்படி செய்வதற்காக நான் வந்திருக்கிறேன்!”

"என்ன?”

"நான் ஒர் ஆன்மாவை விற்க வந்திருக்கிறேன். ஆனால், அதன் மதிப்பு அதிகம்!”

"மதிப்பு அதிகமென்றால் என்ன? வைரத்தின் மதிப்பு அதன் பளபளப்பைப் பொறுத்தது, அது போலத்தான் ஆன்மாவும்."

"என்னுடைய ஆன்மாதான் அது " சயித்தானின் பிரதிநிதிகள் இருவரும் திடுக்கிட்டுப் போயினர். அவர்களுடைய சாம்பல் நிறக் கண்களில் ஒளி வீசிற்று. அப்பழுக்கற்ற பரிசுத்தமான கன்னி காதலீனின் ஆன்மா - அதற்கு ஈடான பொக்கிஷம் வேறு என்ன இருக்கிறது என்று கருதி அவர்கள் திகைத்தார்கள்.

"அழகு மிகுந்த அம்மையே, தங்களுக்கு எவ்வளவு பொருள் வேண்டும்?”

"ஒன்றரை இலட்சம் பொற்காசுகள்."


"அப்படியே வாங்கிக்கொள்ளுங்கள் " என்றனர். இரு வணிகர்களும், உடனே ஆன்ம விக்கிரயப் பத்திரம் ஒன்றை அவளிடம் நீட்டினார்கள். அவள் துணுக்கத்தோடு பதறிக் கொண்டே அதில் கையெழுத்திட்டாள்.

தொகை முழுதும் அவளிடம் எண்ணி ஒப்படைக்கப்பட்டது.

அவள், மாளிகைக்குத் திரும்பியதும் கணக்குப் பிள்ளையை அழைத்து, "இதைப் பகிர்ந்து தானமாகக் கொடும் ! இந்தப் பணத்தைக்கொண்டு ஏழைகள் எட்டு நாள்களைக் கழித்துவிட முடியும். அவர்களுடைய ஆன்மாக்களுள் ஒன்றைக்கூட விற்கவேண்டிய அவசியம் ஏற்படாது" என்று கூறினாள்.

இதற்கப்பால் அவள் தன்னுடைய அறைக்குள்ளே சென்று கதவை அடைத்துக்கொண்டாள். எவரும் தன்னைத் தொந்தரவு செய்யக்கூடாதென்று அவள் முன்னதாகவே எல்லோர்க்கும் சொல்லி வைத்திருந்தாள்.