பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


போல் பாசாங்கு செய்து கொண்டு தரையோடு தரையாய்க் கிடந்தான். தலையை மேலே தூக்கியிருந்தால் அவனும் விண்ணை எட்டிப்பார்த்திப்பான். சார்ஜெண்டு வாலஸ் கடைசிவரை தயங்காது தனியே நின்று போராடி வந்தான். அவன் அடைக்கலம் புகுந்தால் உயிர்ப்பிச்சை கொடுப்பதாய்ப் புரட்சிக்கார்கள் பலமுறை கூறிப்பார்த்தார்கள். அவன் கேட்பதாயில்லை. கூட இருந்தவர்கள் தன்னைக் காட்டிக் கொடுத்துப்போன பின்பும் அவன் கலங்காது நின்று போராடினான். சுற்றிலும் பெருங்குழப்பம், இடமோ மிகச் சிறியது. வண்டியில் மக்கள் கூட்டம் அதிகம். அவ்வளவுக்குமிடையே புரட்சிக்காரர்கள் ஹோகனைக் கதவு வழியாக வெளியே தள்ளிக்கொண்டு போவதற்கு ஏற்பாடுகளைச் செய்தனர்.

கடைசியில் ஹோகன் பந்தோபஸ்தாய் வெளியேற்றப்பட்டான். புரட்சிக்காரர்களும் வண்டியை விட்டு வெளியே குதித்தார்கள். வீரமிக்க சார்ஜெண்டு அவர்களை விடுவாதாயில்லை. அவனும் வெளியே குதித்து அவர்களைப் பார்த்துச் சுட்டுக்கொண்டேயிருந்தான். தான்பிரீன் திரும்பிப் பார்த்தான். அவன் உடம்பில் ஒரு குண்டு பாய்ந்து இரத்தப் பெருக்கெடுத்தது. ஆனால் குண்டு எந்த இடத்தில் பாய்ந்தது என்பது அந்த ஆத்திரத்திலும் அவசரத்திலும் அவனுக்குப் புலனாகவில்லை . சிறிது நேரத்திற்குப் பிறகு தான் சுவாசப்பையில் காயம் பட்டிருப்பதை உணர்ந்தான்.

டிரீஸி, ஈமன் ஓப்ரியன், ஸ்கான்லன் ஆகிய மூவருக்கும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர்களிடமும் தான்பிரீனிடமுமே ரிவால்வர்கள் இருந்தன. ஆயுதங்கள் வைத்திருந்த நால்வருடைய உடம்புகளிலும் இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. தான்பிரீனைத் தவரி மற்ற மூன்று பேர்களுடைய துப்பாக்கிகளும் சண்டையில் எங்கோவிழுந்துவிட்டன. தான்பிரீன் ஓருவனே ஆயுதந்தாங்கிச் சண்டை செய்யக்கூடிய நிலைமையில் இருந்தான். அவனுக்கு எதிராக சார்ஜெண்டு வாலஸ் போராடிக்கொண்டிருந்தான். அத்துடன் இறந்து போனதாய் பாவனை செய்து கொண்டிருந்த கான்ஸ்டபிள் ரெய்லியும் மெல்ல எழுந்து வந்து தான்பிரீனைப் பார்த்து ஓயாமல் சுட்டுக் கொண்டிருந்தான். தான்பிரீனுடைய வலது கையில் மீண்டும் ஒரு குண்டு பாய்ந்தது. அவனுடைய ரிவால்வரும் கீழே விழுந்து விட்டது. அவன் குனிந்து அதை எடுத்துக் கொண்டு மீண்டும் இரண்டு எதிரிகளையும் பார்த்து சுடலானான். வலது கை பயனற்றுப் போனதால், இப்பொழுது இடது கையால் சுட்டு வந்தான். இத்தகைய சந்தர்ப்பம் ஏற்படு மென்றே அவன் முற்காலத்திலேயே இரண்டு கையாலும் குறிதவறாது சுடப்பழகியிருந்தான். அந்தப் பழக்கம் இந்த ஆபத்தில் மிக உதவியாக இருந்தது. எதிரிகளுடைய குண்டுகளுக்கு இடம் கொடாமல் தப்புவதோடு, அவர்களையும்சுட வேண்டியிருந்தது. இடையில் வேறு எதிரிகள் எங்கிருந்தாவது வருதற்குள் போராட்டத்தை அவசரமாகவும் முடிக்க வேண்டியிருந்தது.

82