பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


ஒரு சமயம் ஆயுதக் கொள்ளைக்காகச் சென்று வரும்பொழுது தான்பிரீன் பகைவர்களுடைய கையில் சிக்கும்படி நேர்ந்தது. அவனும் டிரீஸி முதலான நண்பர்களும் திப்பெரரியிலிருந்து திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது தான்பிரீனுடைய சைக்கிளில் காற்றுக் குறைந்து போய்விட்டதால் அது ஓடாது நின்று விட்டது. அவன் கீழே இறங்கி மற்றவர்களை முன்னால் செல்லும்படி விட்டு சைக்கிளுக்குக் காற்றடிக்க ஆரம்பித்தான். முன்னால் சென்ற தொண்டர்களை போலிஸார் பார்த்துவிட்டனர் அவர்கள் போகும் வழியிலேயே போலிஸ் படை வீடுகள் இருந்தன. ஆனால் போலிஸார் அந்த ஆறு தொண்டர்களிடம் நெருங்கத்துணியவில்லை. அவர்களுக்கு வழக்கமாயிருந்த தைரியத்துடன் விலகியிருந்து விட்டார்கள். தொண்டர்கள் வாயுவேகமாக மறைந்து விட்டார்கள். அந்நிலையில் தான்பிரீன் காற்றடித்துக்கொண்டிருக்கும் பொழுது ஒரு தடித்த போலிஸ்காரன் அவனுடைய சட்டையைப் பிடித்து இழுத்தான். அதுவரை போலிஸ் புலி அவன் பக்கத்தில் இருப்பதை தான்பிரீன் உணரவில்லை. அவனுடைய இடதுகையில் பூட்டுக்களை உடைப்பதற்கு உபயோகிக்கப்படும் இரும்புப் பட்டையொன்று இருந்தது. அவன் அதைக் கொண்டு போலிஸ்காரன் மண்டையிலே அடித்து, மண்டை சரியாக இருக்கிறதா என்று பரீட்சை பார்த்தான். ஆசாமி அப்படியே அமர்ந்து விட்டான். உடனே தான்பிரீன் ரிவால்வரை உருவி மற்றப் போலிஸார் முன்பு அதை நீட்டிக் கொண்டு புறப்பட ஆரம்பித்தான். போலிஸ் அதிகாரி "மரியாதையாகப் பணிந்துவிடு அல்லது சுட்டுவிடுவேன்“ என்று பயமுறுத்தினார். தான்பரீன், "கைகளைக் கீழே போடுங்கள்! இல்லாவிட்டால் உங்களைக் கூட்டத்தோடு சுவர்க்கத்திற்கு அனுப்பிவிடுவேன்“ என்று பதிலுரைத்தான். போலிஸார் அந்த உத்தரவுக்குப் பணிந்தனர். அச்சமயத்தில் தான்பிரீன் திடீரென்றுதன் சைக்கிளில் ஏறி ஒரு முடுக்கு வழியாகப் பாய்ந்து சென்று விட்டான். அவன் அன்று தப்பியது மிகவும் ஆச்சரியம். ஏனென்றால் சில நிமிஷங்களுக்குள் அபாய அறிவிப்புக் கொடுக்கப்பட்டு, நகரைச்சுற்றிலும், தெருக்களிலும் சந்துகளிலும் ஏராளமான பட்டாளங்கள் தொண்டர்களைப் பிடிப்பதற்காக நிறுத்தப்பட்டன. ஆனால், அதற்குள் தான்பிரீன் தனது வெடிமருந்துச் சாலையில் தோழர்களுடன் செளக்கியமாக அமர்திருந்தான்.

தான்பிரீனுடைய வெடிமருந்துச்சாலை நெடுநாள் நிலைத்திருக்கவில்லை. அங்கு தொண்டர்கள் தங்களுக்கு வேண்டிய செளகரியங்களைத தாங்களே தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. சமையல் செய்வதற்கும், தண்ணிர் கொண்டு வருவதற்கும் வேறு உதவியாளில்லை. ஒருநாள் தான்பிரீன் ஒரு வாளி தண்ணீர் கொண்டுவருவதற்கு வெளியே சென்றிருந்தான். அவன் திரும்புகையில் குடிசையில் இருந்து சுமார் 150 அடி தூரத்தில் வரும்பொழுது தீடிரென்று குடிசையின் கூரை ஆகாயத்தில் எழும்புவதைக் கண்டான். அதே சமயத்தில் இடி இடித்தது போல் பல வெடிகுண்டுகள் வெடிப்பதையும் கேட்டான். ஒரு நிமிஷத்தில் வீடு முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. அவன் உள்ளேயிருந்த

தன்னு

45