பக்கம்:நான்மணிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

நான்மணிகள்

 கடுஞ்சொல் அன்புடையர் வாயினிற் தோன்றாது: வஞ்சனைச் சொல் கற்றறிந்தார் வாயினிற் தோன்றாது; தீய சொற்கள் சான்றோர் வாயினிற் தோன்றாது; கீழ் மக்கள் வாயினில் யாவும் தோன்றி விடும். (96)

அழகிய மகளிர்முன் அழகில்லான் சிறப்படையான்; கற்றார் அவையில் கல்வியற்றார் சிறப்படையார்: கல்லாதார் கூட்டத்தில் கற்றவர்கள் சிறப்படையார்; அறிவில்லார் இடைப்பட்டால் அறிஞரும் சிறப்படையார். (97)

மாசுபட்டாலும் வைரம் ஒளி குன்றாது; கழுவி எடுத்தாலும் இரும்பு ஒளி வீசாது: தண்டித்து வைத்தாலும் கீழ்மக்கள் திருந்தார்கள்; நல்லுரை கூறினும் கீழ்மக்கள் கேளார்கள். (98)

சான்றோரைவிட்டு நீங்காது வாழ்தல் அறிவுடைமையைக் காட்டும்; இரக்கமில்லாருடன் சேர்ந்து வாழ்தல் தீமையடைவதைக் காட்டும்: நண்பர்களது சொல் கடுமையாயிருப்பினும் நல்வழியைக் காட்டும்; பண்புடைய மனைவி இல்லாத வீடு பாழ்படுவதைக் காட்டும். (99)

குளம் சிறிதானால் நீர் கொள்ளாது வழியும்; வருமானம் சிறிதானால் மனைவி மிகுந்து பேசுவாள்; தவச்செயல் சிறிதானால் பயனும் குறைந்துவிடும்; வலிமை சிறிதானால் பகைவரும் பெருகுவர். (100)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/46&oldid=1379941" இலிருந்து மீள்விக்கப்பட்டது