கி. ஆ. பெ. விசுவநாதம் □ 147
தமது நுண்ணறிவால், அருந்திறனால், ஏறக்குறைய 7000 பேர்களுக்கு உழைக்க வழிவகுத்து அவர்களின் உழைப்பின் மூலம் ஏறக்குறைய இருபதாயிரம் பேர்கள் பசியின்றி வாழ வகைசெய்து வாழ்ந்து மறைந்த ஏழை பங்காளர் அவர்.
மிகக் குறைந்த நாட்களில் என்னிடம், திருக்குறளைப் படித்து ஆராயத் தொடங்கி, மிக விரைவில் குறள் முழுவதற்கும் பொருள் கூறும் அறிவையும் ஆற்றலையும் பெற்றுவிட்ட ஒரு சிறந்த தமிழ்ப்புலவர் அவர்.
வால்மீகி இராமாயணத்தை எழுத்தெண்ணிப் படித்ததோடு, கம்பராமாயணத்தையும் நன்கு கற்று, இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் கற்பனை நயங்களையும் எடுத்துக் கூறும்பொழுது ஒரு சிறந்த சாஸ்திரியாகக் காட்சியளித்தவர் அவர்.
அவரது ஆடம்பரமற்ற எளிய தோற்றமும், அன்புகலந்த இன்சொல்லும் நண்பரை மட்டுமல்ல, பகைவரையும் பணியச் செய்யும் வலிமை வாய்ந்தவை.
பிறருடைய தேவையை உணரமறுப்பதும், பிறருடைய உரிமையை ஒப்பமறுப்பதும் ஆகிய இரண்டும் மட்டுமே நாட்டில் நடைபெறும் போராட்டங்களுக்குக் காரணம் என்பதை நன்குணர்ந்து, அதற்கேற்றபடி நடந்து காட்டிய உயர்ந்த பண்பாளர் அவர்.