பக்கம்:எனது நண்பர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

காலம்தான் நம் அனைவருக்கும் நல்லாறுதல் கூறமுடியும்”

என்று கசிந்துருகி எழுதியிருக்கின்றார், கி.ஆ.பெ.

பேரறிஞர் அண்ணாவினைத் தன் நண்பராகப் பெற்றவர் இந்நூலாசிரியர். அண்ணாவினுடைய ஆற்றலில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தவர்

“இன்னும் இரண்டாண்டுகள் இருந்திருந்தால் உலகத் தலைவர்களில் ஒருவராக விளங்கியிருப்பார். என் செய்வது? தமிழும், தமிழகமும் பெற்ற பேறு அவ்வளவுதான்”

என வெதும்பி எழுதியிருக்கிறார் கி. ஆ. பெ. அவர்கள்.

தமிழிசைக்குப் பெருமை சேர்த்த ராஜா சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் கி.ஆ.பெ. வினுடைய உள்ளத்தைக் கவர்ந்த நண்பர்களில் ஒருவர். தந்தையும், தனயனும், தமிழுக்கும், தமிழிசைக்கும் ஆற்றிவந்த, வருகின்ற தொண்டினைப் பாராட்டி இந்நூலாசிரியர், தமிழிசை இயக்கத்திற்கு சென்னையில் ராஜா. சர். அண்ணாமலை செட்டியார் தமிழிசை மன்றம் நிறுவினார்; மதுரை நகரில் தமிழிசை மன்றம் கட்டி மகிழ்பவர் ராஜா. சர். முத்தையா செட்டியார் அவர்கள் எனக் கூறியுள்ளார். இச்செயல்கள் கி.ஆ.பெ. அவர்களுக்கு சோழப் பரம்பரையின் சாதனையை நினைவூட்டி இருக்கின்றது. இவ்வாறு கட்டப்பட்ட தமிழிசைச் சங்கங்கள், ராஜராஜ சோழனால் தஞ்சையில் கட்டப்பட்ட பெருங்கோயிலைப் போன்றும், ராஜேந்திர சோழனால் கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டப் பெற்ற பெருங்கோயிலைப் போன்றும் அமைந்திருக்கிறதென்று எழுதியிருக்கின்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/12&oldid=986046" இலிருந்து மீள்விக்கப்பட்டது