பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



 

பாங்கர்—ஓமை
டில்லினியா இன்டிகா
(Dillenia indica, Linn.)

குறிஞ்சிப் பாட்டில் (85) இடம் பெற்றுள்ள ‘பாங்கர்’ என்பதற்கு ‘ஓமை’ என்று உரை கூறிய நச்சினார்க்கினியர், கலித்தொகையில் வரும் பாங்கர் (111) என்பதற்குப் ‘பாங்கர்க்கொடி’ என்று உரை வகுத்தார். பாங்கர் என்ற பாலை நிலத்து மரத்திற்கு ‘ஓமை’ என்றும், பாங்கர் என்ற பெயரில் ஒரு கொடியும் (முல்லைக் கொடியுடன் இணைத்துப் பேசப்படுதலின்) உண்டு போலும் என்றும் எண்ண இடமுள்ளது.

சங்க இலக்கியப் பெயர் : பாங்கர், ஓமை
தாவரப் பெயர் : டில்லினியா இன்டிகா
(Dillenia indica, Linn.)

பாங்கர்-ஓமை இலக்கியம்

“பாங்கர் மராஅம் பல்பூந் தணக்கம்”–குறிஞ். 85

என்று கபிலர் குறிப்பிடும் ‘பாங்கர்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘ஓமை’ என்று பொருள் கூறியுள்ளார். இதற்கு ‘உவா’ என்று பெயர் எனக் காம்பிள் (Gamble) குறிப்பிடுகின்றார். கலைக்களஞ்சியம் இதனை ‘உகா’ என்று கூறுகிறது.

ஓமை மரத்தைப் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. உவர்நிலப்பாங்கான வறண்ட பாலை நிலச்சுரத்திலே ஓமை மரங்கள் காடாக வளரும் எனவும், இதன் அடி மரத்தைப் ‘புன்தாள்’, ‘பொரிதாள்’, ‘முடத்தாள்’ எனவும் குறிப்பிடுகின்றன. இம்மரம் புல்லிய இலைகளை உடையதென்றும், இது மிக ஓங்கி வளரும் என்றும், கவடுகளை உடையதென்றும், இதில் பருந்துகள் ஏறியமர்ந்து கூவும் என்றும், இதில் ‘சிள் வீடு’ என்ற வண்டொன்று தங்கி வெப்பம் மிக்க நடுப்பகலில் கறங்கும் என்றும், உடன்போக்கில் பாலை வழிப்போவாரும் பிறரும் இம்மரத்தின் நிழலில் தங்கி இளைப்பாறுவர் என்றும். இதன் பட்டையை உரித்து யானை உண்ணும் என்றும் கூறப்படுகின்றன.