பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24


அறைந்து கொன்று விடும் என்றும் அவர்கள் அஞ்சினார்கள். அவர்களது துயரத்தை யறிந்த கால்டுவெல் ஐயர், புதையலருகே தாம் போவதில்லை என்று வாக்களித்தார்; ஊரார் சிலரை உடன் இருந்து பார்த்துக்கொள்ளும்படி வேண்டினார். அங்கும் இங்கும் சில இடங்களை அவர் தோண்டிப் பார்த்தபொழுது பழைய கொற்கைத்துறை தரை மட்டத்திற்கு எட்டடிக்குக் கீழேயிருந்ததென்றும், அப்போது அதன் அருகே கடல் இருந்ததென்றும் தெளிவாகக் கண்டார்; தாம்பிரபரணியாற்று நீரில் கலந்து வந்த மண்ணும் மணலும் நாளடைவில் துறைமுகத்தைத் தூர்த்துக் கடலை ஐந்து மைல் தூரம் துரத்தி விட்டதென்று தெரிந்துகொண்டார்.

கொற்கைத் துறைமுகம் தூர்ந்த பின்னர் காயல் என்னும் கடற்கரையூர் சிறந்த துறையாயிற்று. அத்துறையும் தாம்பிரபரணி கடலோடு கலக்குமிடத்திலேயே அமைந்திருந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டி நாட்டுக்கு வந்த மார்க்கோபோலோ என்னும் மேலை நாட்டு அறிஞர் காயல் துறையைத் தமது நூலிற் குறிப்பிட்டுள்ளார். பாண்டி நாட்டில் "காயல் சிறந்ததொரு பெரு நகரம்“[1] என்று அவர் கூறுகின்றார். அரேபியா, சைனா முதலிய அயல் நாட்டுக் கப்பல்கள் காயல் துறைமுகத்தை நாடி வருவதையும், அத்துறையில் பரதவர் மூழ்கி முத்தெடுக்கும் முறையினையும் அவர் விவரமாக எழுதியுள்ளார். அக்காயலைத் துருவிப் பார்த்தார்


  1. “a great and noble city.”