பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை


“கல்வியில் பெரியவன் கம்பன்”
“கல்விச் சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு”

என்றெல்லாம் சின்னஞ்சிறு வயதிலேயே, பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இந்தக் கம்பன் யார் என்று தெரியாமலேயே, நாமும் கிளிப் பிள்ளை மாதிரி, பள்ளியில் படித்ததை சொல்லிக் கொண்டிருந்திருக்கிறோம். பின்னர், வளர்ந்து, பெரிய வகுப்புகளுக்கு வந்தபின்,

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவர்போல், இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை”

என்ற பாரதியின் பாடலைப் படிக்க நேர்ந்தபோதுதான், ஆகா! இந்தக் கம்பன், பெரிய ஆள் போலிருக்கிறதே, அதனால்தான், கம்பனுக்குக் கவிச்சக்கரவர்த்தி என்று பட்டம் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள், கற்றறிந்த பெரியோர்கள் என்று உணர ஆரம்பித்திருக்கிறோம். அப்படி என்னதான் இந்தக் கம்பன் பாடியிருக்கிறான், இத்தனை பேரும் புகழும் எப்படி வந்தது என்று, அவன் ஆக்கித் தந்த கம்பராமாயணத்தைப் படிக்க முனைகிறோம். படிக்கப் படிக்க அதன் சுவை, நம் நாவில் மட்டுமல்ல, நம் உள்ளத்திலும் உணர்விலும் ஊறி நமக்கு உவகை ஊட்டுகிறது. கதையென்னமோ வால்மீகி முனிவர் தந்த கதைதான். ஆனால் அந்தக் கதையை அங்கங்கே, செதுக்கிச் சீராக்கி, தமிழ்ப் பண்பாட்டிற்கேற்ப, கம்பன் கொண்டு செல்கின்ற திறம், கம்பன் கவி நலம், கம்பன் பாத்திரப் படைப்புகள் இவையெல்லாம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. அவன் பாடிச் சென்றுள்ள பன்னீராயிரம் பாடல்களையும் நாம் படித்து அனுபவிக்க அவகாசம் இருக்கிறதோ இல்லையோ,