பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

கம்பன் சுயசரிதம்


ஆயும் அறியும், உலகின்
தாயாகி ஐய!
நீயறிதி எப்பொருளும்
அவை உன்னை நிலையறியா

என்று பாடும்போது அந்த ஆமருவியப்பன் நம் கண் முன்னாலே வந்து போய்விடுவானே இப்படியெல்லாம் தான் நான் பிறந்த நாட்டையும் வளர்ந்த ஊரையும் பற்றிக் கூறியிருக்கிறேன் என் சுய சரிதத்தில்.

நான் – ஊரைப் பற்றி என்ன ஐயா? நல்ல காவிரிக் கரையிலே சின்னஞ்சிறிய ஊர். அங்கு கோயில் கொண்டிருக்கும் தேவாதி தேவனை, ஆமருவி நிரைமேய்க்கும் அமரர் கோமான் அழகையே பார்த்துக் கொண்டிருக்கலாமே. பக்கத்திலிருக்கிறார்கள் கருடாழ்வாரும், மார்க்கண்டேயருமே, இவர்களை எல்லாம் தூக்கியடிக்கிறாளே அந்த அழகு மங்கை காவேரித்தாய் - அடடா, அஞ்சலி ஹஸ்தத்தோடு அவள் இருக்கும் அழகு!

மெலியும் இடை தடிக்குமுலை
வேயிளந்தோள் சேயரிக்கண் வென்றிமாதர்

என்றெல்லாம் பாடினிரே அந்த வென்றிமாதரையும் வெற்றி காண்கிறாள் இந்தக் காவேரி - சிலை உருவில்.

கம்பன் – ஏது, திரு அழுந்தூர் புகழ்பாட ஆரம்பித்துவிட்டாய்? நான் பிறந்த ஊர் என்பதைவிட காவேரித்தாய் இருக்கிறாள் என்றே அந்த ஊரின் மதிப்பை உயர்த்திவிடுவாய் போலிருக்கிறதே. போகட்டும் எப்படியாவது அந்தச் சிற்றூரின் புகழ் பரவட்டும்.

நான் – ஆம். பரவத்தான் போகிறது. அங்கு கம்பன் கலைக்கோயில் ஒன்று கட்ட முனைந்திருக்கிறார்களே தமிழ் மக்கள்.