பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

கம்பன் சுயசரிதம்


நான் – இனி நான் கேள்வி கேட்கமாட்டேன். தாங்களே சொல்லுங்கள் தங்கள் சரிதத்தை. நான் கேட்கிறேன். இடையிடையே சந்தேகம் எழுந்தால் மட்டும் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். இந்த ஏற்பாடு சரிதானே. சொல்லுங்கள்.

(இனி அவர் சொன்னதை எல்லாம் கீழே தருகிறேன்)
நான் பிறந்த நாடு

நான் பிறந்த நாடு எது என்று சொல்லத் தேவையே இல்லை. நான் பிறந்தது தமிழ்நாடு. வற்றாது வளங்கொழிக்கும் காவிரி பாய்ந்து பெருகும் அந்தப் பொன்னி நாடே நான் பிறந்த நாடு. காவிரி நாடன்ன கழனி நாட்டைத்தானே நான் கண்டேன். கங்கை என்னும் கடவுள் திருநதியை வருணிக்க நேர்ந்தபொழுது கூட தெய்வப் பொன்னியே பொருவும் கங்கை என்று தானே பாடினேன்.

வரம்பெலாம் முத்தம் தத்தும்
மடையெலாம் பணிலம் மாநீர்க்
குரம்பெலாம் செம்பொன் மேதிக்
குழியெலாம் கழுநீர்க் கொள்ளை
பரம்பெலாம் பவளம் சாலிப்
பரப்பெலாம் அன்னம் பாங்கர்க்
கரம்பெலாம் செந்தேன் சந்தக்
காவெலாம் களிவண்டீட்டம்

என்பதெல்லாம் இந்தக் காவிரி பாயும் சோழநாட்டின் வளம்தானே.

கன்னி இளவாழை கனி ஈவ, கதிர்வாலின்
செந்நெல் உள, தேன் ஒழுகுபோதும் உள, தெய்வப்
பொன்னி எனலாய புனல் ஆறும்.

இன்னும் இருக்கிறதே. காவிரி நாட்டிற்கு அடுத்தபடியாக நான் மிகவும் மதித்த நாடு, அந்தப் பொன் திணிந்த புனல்