பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ரசிகமணி டிகேசி


குற்றாலம்

6.4.38

நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் நாங்குனேரியிலிருந்து எழுதிய கடிதம் வந்தது. ரொம்ப சந்தோஷம். எப்படியும் தூத்துக்குடி தூரந்தான். நாங்குனேரி பக்கந்தான், நாங்குனேரியிலும் தாங்கள் வசிக்கிற இடமோ ரொம்பச் சரியான இடம். முஜாபரி பங்களா முதலிய சௌகரியங்களைப் பார்த்தால் ஏன் அங்கே நாலுநாள் தங்கக்கூடாது, தங்களோடும் மற்ற நண்பர்களோடும் கூடி ஒரு ஜமா போடக் கூடாதென்று சதா இனி தோன்றும். தாங்கள் தூத்துக்குடியில் இருந்தபோது அப்படி ஒன்றும் தோன்றிவிடாது. உண்மையிலேயே நம்பிபுரம் திருநெல்வேலி ஜில்லாவில் அழகாக அமைக்கப்பட்ட வாசஸ் தலங்களில் ஒன்று. தாங்கள் அங்கே தங்குகிறீர்கள் என்பது எனக்கு ரொம்ப சந்தோஷமான சமாச்சாரம். குழந்தைகளும் அம்மாளும் நன்றாய் வசதியாய் அனுபவிப்பார்கள். ஆரோக்கியமும் அதனால் அதிகமாக ஏற்படும்.

நான் குற்றாலத்தில் முகாம் போட்டு கிட்டத்தட்ட இரண்டு மாசம் ஆகிறது. ஒரு வாரம் வண்ணாரப்பேட்டையில் தங்கியிருக்க நேர்ந்தது. குற்றாலத்துக்கு வந்தபின்தான் எனக்கு உடம்பு சௌகரியப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரம் இங்கே தங்கிவிட்டு வண்ணாரப்பேட்டைக்குத் திரும்பிவிடுவேன்.

ஆர்.வி. சாஸ்திரிகளின் பிரசங்கத்தை தென்காசிவாசிகள் நன்றாக அனுபவித்தார்கள். விஷயத்தையும் நன்றாய் உணர்ந்தார்கள் என்பது, இனி யாராவது பாகவதர் பாட வந்தால், உம் பூச்செல்லாம் இங்கே பலியாது. தமிழில் பாடத் தெரியுமானால் பாடும். அல்லாத பட்சத்தில் நடையைக் கட்டும் என்று சொன்னதிலிருந்து தெரிந்தது.