பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

கம்பன் சுயசரிதம்

இவருக்கு ஒரு கோயில், இவர் மனைவிக்கு ஒரு கோயில். இது எல்லாம் வீண் பண விரயந்தானே’ என்று பேசி இருக்கிறார். இதைக்கேட்ட அர்ச்சகர்கள் துடிதுடித்து, ‘துரைவாள் அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. எங்கள் இராமன் இக்கலியுகத்தில் கண்கண்ட தெய்வம். அவனை உள்ளன்போடு ஆராதிப்பவர்களுக்கு எல்லாம், அவர்கள் வேண்டுவதை எல்லாம் முட்டின்றி அருளுவான்’ என்றெல்லாம் சொல்கிறார்கள் எண்ணம் எல்லாம். ஏரிக்கரையில் இருந்த கலெக்டரும் இதைக் கேட்டு, ‘சரி உங்களுக்கும் உங்கள் இராமனுக்குமே ஒரு சவால், நான் உள்ளன்போடு உங்கள் ராமனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். இந்த வருஷத்து மழையில் இந்த ஏரிக்கரை உடையாமல் இருந்தால் நானே இந்த ராமன் மனைவி ஜானகிக்கு கோயில் கட்டித் தருகிறேன். பார்ப்போம் இதை’ என்று சொல்லிவிட்டு முசாபரி பங்களாவிற்குத் திரும்பி விடுகிறார்.

அன்றிரவே நல்ல மழை. மறுநாள் காடு மேடு எல்லாம் நீர் வழிந்து ஓடுகிறது. ஏரியில் தண்ணீர் மட்டம் ஏறிக்கொண்டே இருக்கிறது. கலெக்டர் கோதண்டராமனை மட்டும் நம்பி சும்மா இருந்துவிடவில்லை. மராமத்து இலாகா அதிகாரிகள் அத்தனை பேரையும் ஏரிக்கரையில் பல இடங்களில் காவல் போட்டு, கரை எங்கே உடைத்துக் கொள்ளும் என்று தோன்றுகிறதோ அந்த பாகத்தையெல்லாம் பலப்படுத்த முஸ்தீபுகள் செய்கிறார். பகல் முழுவதும் மழை பெய்கிறது. இரவும் நிற்கக் காணோம். கலெக்டருக்கு ஒரே கவலை இரண்டாம் நாளும் உத்தியோகஸ்தர்கள் எல்லாம் சோர்வு இல்லாமல் கரையைக் காவல் காப்பார்களா என்று. ஆதலால் அவர்களைச் சடுதி பார்க்க, இரவு பத்து மணிக்கு, கலெக்டர் புறப்படுகிறார், குடை ஒன்றை எடுத்துக்கொண்டு. தாசில்தார், டபேதார், மற்றும் ஊர்க்காரர் சிலரும் பின்னாலேயே வருகிறார்கள். எல்லோருமே ஏரிக்கரை மீது நடக்கிறார்கள் கொட்டுகிற மழையிலே கலங்கல் பக்கம் வந்ததும் துரை