பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

43

அவர்களால் புகழ்பெற்ற நாடுகள் கிரீசும் இத்தாலியும், இங்கிலாந்துமே. இம்மூவரில் முன்னவனான ஹோமர் அர்த்த கவுரவ முதிர்ச்சியுடைய பாக்களை அருளினான். இடைநின்ற வர்ஜிலோ கவிதா நடையின் உன்னதத்தினால் மாண்பு பெற்றான். மூன்றாவது கவிஞனை உருவாக்க இயற்கையன்னை நெடுநாள் தவம் கிடந்தாள். கடைசியாக அந்த கவுரவத்தில் தலைநின்ற ஹோமரையும் உன்னத கவிதாநடையினால் பெருமை பெற்ற வர்ஜிலையுமே இணைத்து மில்டன் என்ற பெயரோடு ஒரு மகா கவிஞனை உருவாக்கிவிட்டாள். அவனே உலக மகாகவி அவனுக்கு ஒப்பாரும் இல்லை. மிக்காரும் இல்லை என்று அறுதியிட்டுக் கூறுகிறான். இத்தனை அருமையான கருத்துக்களையும

Three poets in three distant ages born Greece Italy and England did adorn the first in Loftiness of thought surpassed; The next in Majesty; in both the last the force of nature could no further go; to make a third she joined the former two.

என்று ஆறு அழகிய அடிகளில் சொன்னான் அவன். இந்த முத்தாய்ப்பை மேல்நாட்டு அறிஞர்கள் எல்லாம் அப்படியே ஒப்புக் கொள்கிறார்கள். மறுப்பவர் ஒருவரும் இலர்.

சரி. இப்போது காரியம் எளிதாகிவிட்டது. உலக மகா கவிகளுக்குள்ளே ஒப்பற்ற ஸ்தானம் வகிக்கிறவன் மில்டன். அவனோடு மட்டும் கம்பனை ஒப்புமை காட்டி கம்பனுடைய ஸ்தானத்தை உலக மகாகவிகளில் விடுவது கஷ்டமான காரியம் இல்லையே. பார்க்கலாம் அதையும்.

மில்ட்டனது சுவர்க்க நீக்கம் என்ற காவியத்தில் எல்லோராலும் பாராட்டப்படுகிற பகுதி ஒன்று உண்டு. இறைவனோடு என்னேரமும் போராடுவதையே தன் நித்திய கர்மமாகக் கொண்ட சாத்தான் சுவர்க்கத்திலிருந்து அகற்றப்படுகிறான். எரிவாய் நரகத்தில் தள்ளப்படுகிறான்.