பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


தமிழ் நாட்டில்
தாய்வழிச் சமுதாயம்


பண்டைத் தமிழ் நூல்களில் பல அரசர் சிற்றரசர்களைப் பற்றிப் படிக்கிறோம். சிறப்புப் பெற்ற அவர்களெல்லாம் ஆண்கள். அவர்கள் தாய்முறை ஆண் வழியாகவே காணப்படுகிறது. தெய்வங்களில் ஏற்றமுடைய அனைத்தும் ஆண் வழியாகவே காண்ப்படுகின்றன. குறிஞ்சித் தெய்வமான சேயோன் (முருகன்), முல்லைத் தெய்வமான மாயோன் (திருமால்), நெய்தல் தெய்வமான வருணன், மருதத் தெய்வமான இந்திரன், ஆகிய அனைவரும் ஆண்பால் தெய்வங்களே. காவியங்களில் ஆண்களே தலைமை பெறுகிறார்கள். மணிமேகலை கதைத் தலைவியாக உருவாக்கப்பட்டிருப்பினும் அவளது ஆசிரியர் அறவணர் என்ற ஆண் என்பது சிந்தனைக்குரியது. சீவக சிந்தாமணி, பெருங்கதை ஆகிய காவியங்களில் ஆண் தலைமை பெறுவதும், பல பெண்கள் அவனுக்கு வாழ்க்கைப்பட்டு அவனது வெற்றிக்கு உதவுவதும் பெண்களுக்கு ஆணுக்குத் தாழ்ந்த ஸ்தானத்தைத் தான் காவியங்கள் அளிக்கின்றன என்பது தெளிவாகிறது. புறநானூற்றில் பெரும்பாலான செய்யுட்கள், ஆண்களின் வெற்றிச் சிறப்பையும், கொடைச் சிறப்பையும் போற்றுகின்றன. பெண் கவிகள் சிலர் பாடிய செய்யுட்கள் இத்தொகை நூலிற் காணப்பட்ட போதிலும், அவை ஆண்களுடைய வீரத்தையும், கொடையையும் பாராட்டுவனவாகவே உள்ளன. ஒன்றிரண்டு செய்யுட்கள் பெண்களுடைய துயரங்களைச் சித்தரித்த போதிலும் அவை ஆண்களைப் பிரிந்தபோது பெண்கள்படும் வேதனையாக இருக்கிறது.

இவை எல்லாவற்றையும் சான்றாகக் காட்டி தமிழ் நாட்டில் எப்பொழுதும் தந்தை வழிச் சமுதாயமே இருந்து வந்திருக்கிறதென்றும், ஆண் ஆதிக்கச் சமுதாயமே எப்பொழுதும் நிலை கொண்டிருந்தது என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வருகிறார்கள். அவர்கள் முடிவு சரிதானா? மேற்கூறிய சான்றுகளை மட்டும் தொகுத்து முடிவு

69