பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

"கவரி திண்டேர் கற்பக தருவொடு ஈந்தான்"[1] என்கிறது திருவாலவுடையார் புராணம்

"அரசர் ஆணையால் கற்பகமரம் இவ்வுலகிற்குவர அதனை விரும்பாத தேவர்கள் வஞ்சினமொழியால் அம்மரம் பூ அளவே தந்தது; மந்தாரமும் அவ்வாறே"28- என்பது நச்சினர்க்கினியர் காட்டும் கதைக் குறிப்பு.

மேல் உலகத்திற்கும் நம் உலகத் தாமரைப் பூ சென்றது. இங்கு அடியார் இட்ட மலர்கள் அங்கு சேர்ந்தன. செல்வக் குவியலின் தெய்வமான குபேரன் இங்கிருந்து போன சீரகப் பூ மாலையை அணிந்தவன். அதனால் அவனுக்கு 'சீரகத் தாரோன்’ என்பது ஒரு பெயராயிற்று. இவ்வாறு பல கதைகள் இவ்வுலக மலர்கள் மேல் உலகம் சென்றதைக் குறிக்கின்றன.

இவ்வுலகில் பூக்கள் எங்கும் பூத்துக் கமழ்கின்றன. உலகத்தின் தெற்கு வடக்கு முனைகளின் பனித்தளங்கள், பாலைவன மணற்பரப்புகளில் சில இடங்கள் தவிர ஏனைய நில, நீர், மலைப் பகுதிகளில் எல்லாம் பூக்கள் பூத்துக் குலுங்கு கின்றன. அவ்வந்நாட்டு வெப்ப தட்பங்களுக்கேற்ப மலர்வகைகள் அமைந்துள்ளன.

கீழை நாட்டிலிருந்து மேலை நாட்டிற்கும் அங்கிருந்து இங்கும் பூக்கள் மாறி மாறிப் பயிராகிப் பரவின. இருவகை நாட்டு மக்களும் பூக்களில் நாட்டங்கொண்டனர்; கண்டனர்; மோந்தனர்; சூடினர்; மகிழ்ந்தனர்; மகிழ்கின்றனர். ஆயினும், இரு வகையாரும் பூக்களைக் கண்டு பயன் கொள்ளும் வகையில் வேறுபாடு உண்டு.

கீழை நாட்டு மக்கள் பூக்களைப் பயன்படுத்திய வகையில் உணர்ச்சிப்போக்கு நிறைவானது அறிவுப் போக்குகுறைவானது. மேலைநாட்டார் போக்கில் அறிவுப்பாங்கு உலகளவு; உணர்ச்சிப் பாங்கு உழக்கு அளவு எனலாம், கீழை நாட்டில் பொதுவான அறிவியல் துறையின் மூலங்கள் அரும்பின. அவ்வரும்புகளைச் சூழ்ந்து முரன்று முகிழ்க்கச் செய்யும் வண்டுகளாம் அறிவியல் வல்லுநர் தோன்றவில்லை; முனையவில்லை; வளர்க்கவுமில்லை.


  1. 27 திருவால; 87; 75 28 சீவ, சி. 1701