குழந்தைகள். முகைப்பருவத்தர் கட்டிளங்கன்னியர், காளையர் எனவே,
குழந்தைப் பருவம்,
இளமைப் பருவம்,
முதுமைப் பருவம் -என மூன்று பருவக் குறிப்புகள் முற்காலத்தில் கொள்ளப்பட்டவையாகத் தெரிகின்றன. இதனையே வடமொழியாளர் பால குமார விருத்தம் என்றனர்.
இம்முப்பருவ அமைப்பு எனக்கும் இயல்புடையதே எனலாம். வீழ்ந்துபோன 'வீ' என்னும் ஏழாவது பருவம் நீங்கலாக மற்றைய ஆறு பருவங்களும் வளமான வாழ்வியல் பருவங்கள் அன்றோ?
இவ் ஆறு பருவங்களையும் ஒன்றுக்கொன்று அதிகம் வேறுபாடு இல்லாதவை என்ற வகையில் நோக்கினால்,
நனை, அரும்பின் தோற்றக்கூறு. நனைக்கும் அரும்பிற்கும் சிறிதளவே வேறுபாடு. இலக்கியங்கள் ’நனை’ என்பதற்கு ‘அரும்பு’ என்றே பொருள் தருகின்றன.
முகை போதின் முதற்கூறு. இரண்டும் அதிகம் வேறுபாடு அற்றவை.
அலர் மலரின் மதர்ப்பு.
இவ்வகையில்,
நனை - அரும்பு : குழந்தைப் பருவம்
முகை - போது : இளமைப் பருவம்
மலர் - அலர் : முதுமைப் பருவம்
--என அமையும்.
இதனை அறிவிப்பார் போன்று திருவள்ளுவப் பெருந்தகை,
"காலை அரும்பி,
பகலெல்லாம் போது ஆகி,
மாலை மலரும்"89 -என்றார். காமநோயின் பிறப்பு, வளர்ச்சி, முதிர்ச்சியைக் காட்ட எழுந்த இக்குறள், நான் குழந்தை அரும்பாக, இளமைப் போதாக, முதுமை மலராக முப்பருவங்கொள்வதைக் காட்டுகின்றது.
89. குறள் : 1227.