பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

உலக


அவர் தோன்றிய நய வம்சத்தில் இவருக்கு முன்பு இரண்டு நூற்றாண்டுகளாக பல தீர்த்தங்கரர்கள்-தத்துவ போதகர்கள் வாழ்ந்ததாக வரலாறு இருக்கிறது. அவர்கள் போதனையின் வழியிலே வர்த்தமானர் தன் ஆன்மீக பயணத்தைத் தொடர்ந்தார்.

கடுமையான கட்டுப்பாட்டுடன் துறவி வாழ்க்கையை மேற்கொண்டு, ஊர் ஊராகவும், மலே காடுகளிலும் அலைந்து கடைசியில், தாம் புறப்பட்ட 13ம் ஆண்டில் ஒரு வைகாசிமாதம் ஆலமரத்தினடியில் அமர்ந்து, ஞானம் பெறாமல் எழமாட்டேன் என்ற வைராக்கியத்தோடு இருந்தபோது ‘கேவல ஞானம்’ என்ற மெய்ப்பொருள் உணர்வைப் பெற்றார்.

கர்ம வினையை வென்றவர் என்பதால் ‘ஜைனர்’ என்ற பெயர் பெற்றார். இவர் ஜைனரானபின் போதித்த கருத்துக்கள் மதக்கொள்கையானதால் அது ஜைன மதம் என்ற பெயர் பெற்றது.

இந்த மதக் கொள்கைகளை அவ்வப்போது உலகிலே பரவச் செய்யும் பொருட்டு, தீர்த்தங்கரர்கள் என்னும் வழிகாட்டும் பெரியோர்கள் தோன்றுகிறார்கள் என்று அவர்கள் கருத்து. இதுவரை இருபத்திநான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளதாகக் கூறினாலும், அது சர்ச்சைக்கிடமாகி கடைசியில் வந்த பார்சவநாதர், வர்த்தமானர்தான் இம் மதத்தை ஸ்தாபித்தவர்கள் என்றும் வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.

28வது தீர்த்தங்கரர் பார்சுவநாதர் கி.மு.8ம் நூற்றாண்டில் இருந்தவர். இவருக்குப் பின் 250 ஆண்டுகள் கழித்து வர்த்தமானர் வாழ்ந்திருக்கிறார். இவர் காலத்திலேயே புத்தரும் இருந்திருப்பதாகக் கொள்ளலாம். மகாவீரர் வயதில் மூத்தவர்.

வர்த்தமானர் ‘கேவல ஞானம்’ பெற்ற ஓராண்டு கழிந்து தீர்த்தங்கரர் ஆனார். இறுதியில் பாட்னா ஜில்லாவில் பாவபுரி என்ற கிராமத்தில் தனது 72வது வயதில் காலமானார். இறப்பதற்கு முன் 55 பேருரைகளை ஆற்றினார். கர்மா என்பதன் பொருளையும் அதன் விளைவுகளையும் விவரித்தார்.