பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வேங்கடம் முதல் குமரி வரை

வாதினை உரைக்கிறார். மூல ஓலையையே காட்டித் தம் கட்சியை நிலைநிறுத்துகிறார். வேறு வழியில்லை. நம்பியாரூரர் கிழவர் பின்னாலேயே செல்கிறார். முன் சென்ற கிழவர் அங்குள்ள அருள்துறை என்னும் கிருபாபுரி ஈசுவரர் கோயிலுள் நுழைந்து 'இதுவே என் 'வீடு' என்று சொல்லி மறைகிறார். அப்போதுதான் உணர்கிறார். இறைவனே தம்மைத் தடுத்து ஆட்கொள்ளக் கிழவேதியராக வந்திருக்கிறார் என்பதை. இறைவனும், நீ நம்மோடு வன்மை பேசி வாதிட்டாய், ஆதலால் நீ வன் தொண்டனாகவே விளங்குவாய், எம்மேல் சொல் தமிழ் பாடல்கள் பாடு' என்று ஏவுகிறார். 'எபடிப் பாடுவது' என்று வன்தொண்டர் மயங்கியபோது, 'நீ நம்மைப் பித்தன் என்றெல்லாம் பேசி ஏசினாய் அல்லவா, பித்தன் பித்தன் என்றே பாடு' என்று வேறே அடியெடுத்துக் கொடுக்கிறார். பாடுகிறார் வன்தொண்டர்.

பித்தா பிறைசூடி!
பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே!
நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத்தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
அத்தா! உனக்கு ஆளாய் இனி
அல்லேன் எனலாமே.

என்றே பாடிப் பரவுகிறார்.

அருள் துறை கோயில் வாயிலுக்கு வந்ததும் இந்தப் பாடல் எனக்கு ஞாபகம் வந்தது. பெண்ணைக்குத் தென் பக்கம் இக்கோயில் இருக்கிறது. என்கிறாரே இவர். நாம் வந்த வழியில் இந்த ஊருக்கு வடக்கே நான்கு மைல் தொலைவில் அல்லவா தென்பெண்ணை இருந்தது என்று எண்ணினேன், உடன் வந்த அன்பர்களையும் விசாரித்தேன்.