வண்ணமாலை கைபரப்பி, உலகை
வளைந்த இருள் எல்லாம்
உண்ண எண்ணி, தண்மதியத்து
உதயத்து எழுந்த நிலாக்கற்றை
விண்ணும் மண்ணும் திசைஅனைத்தும்
விழுங்கிக் கொண்ட விரிதல் நீர்ப்
பண்ணைவெண்ணெய்ச் சடையன்
புகழ்போல் எங்கும் பரந்துளதால்
என்பதுதானே கம்பர் பாட்டு. இந்த வள்ளல் சடையப்பர் பிறந்த பதியே வெண்ணெய் நல்லூர். சடையப்பர் பிறந்த பதியைப் பற்றியும் ஒரு விவாதம். தென் பெண்ணைக் கரையிலுள்ள திருவெண்ணெய்நல்லூரா? இல்லை, காவிரிக் கரையில் குத்தாலம் பக்கத்திலுள்ள கதிர்வேய் மங்கலமா என்று (கதிராமங்கலம் என்று பெயர் நிலவுகிறது). கதிர்வேய் மங்கலத்தையும் அங்குள்ளவர்கள் வெண்ணெய் நல்லூர் என்றே அழைக்கிறார்கள். இந்த விவாதத்துக்கு விடை கூற முயல்கிறது. சோழ மண்டல சதகப் பாட்டு ஒன்று.
எட்டுத்திசையும் பரத்தநிலா
- எறிக்கும் கீர்த்தி ஏருழவர்
சட்டப்படுஞ்சீர்வெண்ணெய் நல்லூர்
- சடையன், கெடிலன் சரிதம்எலாம்
ஒட்டிப்புகழ, ஆயிரம் நாவு
- உடையார்க்கு அன்றி, ஒருநாவால்
மட்டுப்படுமோ? அவன் காணி வளஞ்சேர் சோழ மண்டலமே.
வெண்ணெய் நல்லூர்ச் சடையனைக் கெடிலன் என்றும் போற்றுவதால், கெடில நதி ஓடுகின்ற நடுநாடே. அவன் நாடு என்றும், ஆனால் அவனுக்குக் காணி வளம், சில காலம் சோழ நாட்டில் இருந்திருத்தல் கூடும் என்றும் தெரிகிறது.