பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

வேங்கடம் முதல் குமரி வரை

என்று பாட ஆரம்பித்து விடுகிறது. சிவபாத இருதயருக்கோ ஒரே மகிழ்ச்சி, தம் குழந்தைக்கு அன்னை தன் ஞானப் பாலையே ஊட்டியிருக்கிறாளே என்று. இந்த அதிசய சம்பவத்தை நினைவுகூறவே இந்தத் திருவிழா என்றேன். இத் திருவிழா நடக்கும்போது மக்கள் எல்லாம் கொண்டு வந்திருந்த பாலை ஞானசம்பந்தருக்கு நிவேதனம் பண்ணிவிட்டு உண்டால், அவரவர்க்குத் தம் அறியாமை நீங்கி அருள் ஞானம் பிறக்கும் என்று நம்பிக்கை. 'திருமுலைப்பால் உண்டார் மறுமுலைப்பால் உண்ணார்' என்பது பழமொழி. அதுதான் இன்று அத்தனை பேர் பாலை நிவேதித்து அருந்தினர் என்று நண்பரிடம் விளக்கினேன்.

நண்பர் சொன்னார்: 'என்ன அருமையான அனுபவம்! எவ்வளவு அழுத்தமான பக்தியில் பிறந்திருக்கிறது இந்த நம்பிக்கை, பக்தி நம்பிக்கையை வளர்க்கிறது உள்ளத்தில்; அந்த நம்பிக்கை பக்திக்கு ஊன்றுகோலாய் நின்று உதவுகிறது' என்றெல்லாம் வியந்து கொண்டேயிருந்தார். அமெரிக்க நண்பருக்கும் அவர் மனைவிக்கும் அது புதிய அனுபவம். எனக்கோ அது உளம் உருக்கும் அரிய அனுபவம். இந்த அனுபவம் பெற விரும்பினால் சித்திரை மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தில் இரண்டாம் நாள் திருவாதிரை நக்ஷத்திரத்தன்று சீகாழி செல்ல மறவாதீர்கள். 'ஞான சம்பந்தர் வாழ்விலேயே ஒரு விசேஷம் அவர் பிறந்தது திருவாதிரையிலேயே; அவர் ஞானப்பால் உண்டது ஒரு திருவாதிரையிலேயே; அவர் முத்திப் பேறு பெற்றதும் ஒரு திருவாதிரையிலேதான் என்று அறிவோம்.) இந்த ஞானப்பால் உண்டவைபவம் ஏதோகர்ண பரம்பரைக் கதையல்ல, உண்மையிலேயே நடந்து ஒன்று என்பதற்கு,

போதையார் பொற்கிண்ணத்து
அடிசில் பொல்லாது எனத்
தாதையார் முனிவு உறத்
தான் எனை ஆண்டவன்