பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

53


‘நிறுத்து பிரேமா, நிறுத்து! இப்போது எனக்கும் உனக்கும் இடையே யார் இருந்தாலும், எது இருந்தாலும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது!' என்று அவன் வெறி பிடித்தவன் போல் கத்துவானாயினன்.

‘ரேடியோ கூடவா?’

'ஆமாம். இப்போது நான் பாட வேண்டும். நீ ஆட வேண்டும்; நீ கடிக்க வேண்டும், நான் துடிக்க வேண்டும்; நான் கிள்ள வேண்டும், நீ துள்ள வேண்டும்...'

இவன் இப்படி அடுக்கிக்கொண்டே போக, இடையில் யாரோ வந்து கதவைத் தட்ட, ‘இது எந்தக் கரடி, பூஜை வேளையில்?’ என்று அவன் கொதித்து எழ, 'ஆத்திரப்படாதீர்கள்; யாராயிருந்தாலும் இதோ நான் போய் அவர்களை உடனே அனுப்பி வைத்துவிட்டு வந்து விடுகிறேன்!’ என்று அவள் அவனை ஓர் அமுக்கு அமுக்கி உட்கார வைத்துவிட்டுப் பாய்ந்து சென்று கதவைத் திறந்து, அங்கே நின்ற ஏகாம்பரத்துக்கு ‘ஸ், பேசாதே!’ என்று ஜாடை காட்டி, அவனை அடுக்களைப் பக்கமாக ஒரு தள்ளுத் தள்ளி விட்டுவிட்டு, 'ஐயோ, திருடன்! ஐயோ, திருடன்!' என்று கத்தோ கத்து என்று கத்த, 'எங்கே பிரேமா, எங்கே?’ என்று பதறிக் கொண்டே அவன் வெளியே ஓடி வர, 'அதோ, என் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு அவன் ஓடுகிறான்!' என்று அவள் தெருவைக் காட்ட, 'ஆமாம், திருடன் கதவைத் தட்டிவிட்டா வருவான்?' என்று அவன் அப்போதும் ஒரு சந்தேகத்தைக் கிளப்ப, 'நாம் தூங்குகிறோமா, இல்லையா என்று தெரிந்துகொள்வதற்காக அவன் கதவைத் தட்டியிருப்பான்; அதுகூடவா தெரியவில்லை உங்களுக்கு?’ என்று அவள் அவனை ஓர் இடி இடித்து, ‘ஓடுங்கள்; பிடியுங்கள்!’ என்ற அவனை விரட்ட, 'இப்போது தான் அது எனக்குத் தெரிந்தது, கண்ணே!' என்று அசடு வழியச் சொல்லிக்கொண்டே அவன் தெருவில் இறங்கி ஓடுவானாயினன்.