பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36


‘அப்படியா? உட்காரும்!' என்று அவரைச் செல்வந்தர் உட்கார வைக்க, இன்னொருவர் வந்து, 'நித்திரை சுகமே பெரிய சுகம் என்றேனே, அவன்தான் நான்' என்றார் தயங்கித் தயங்கி.

‘ஓ, என்ன விஷயம்?’ என்றார் செல்வந்தர்.

‘பசிக்கிறது!’ என்றார் அவர்.

‘அப்படியா? உட்காரும்’ என்று அவரையும் உட்கார வைத்துவிட்டு, ‘இன்னொருவர் எழுந்து வரவில்லையா?' என்று செல்வந்தர் கேட்க, ‘இல்லை, அவர்தான் குறட்டை விட்டுக் கொண்டு தூங்குகிறாரே!' என்றனர் இருவரும் வயிற்றெரிச்சலுடன்.

‘ஏன், நீங்கள் தூங்கவில்லையா?' என்றார் வீட்டுக் குரியவர்.

‘தூக்கம் வந்தால்தானே தூங்க? பசிதான் வயிற்றைக் கிள்ளுகிறதே!' என்றனர் இருவரும்.

‘உங்கள் பெண் சுகம், நித்திரை சுகமெல்லாம் என்னவாயின?' என்று செல்வந்தர் கேட்க, ‘அன்ன சுகத்துக்கு அப்பால்தான் அந்த சுகமெல்லாம் என்று இப்போதல்லவா தெரிகிறது எங்களுக்கு?' என்று இருவரும் சொல்ல, 'அப்படியா?' என்று செல்வந்தர் சிரித்து, அவர்களுக்கும் அறுசுவையோடு அன்னமிட, அதை உண்டு அவர்களும் ஆனந்தமாக உறங்கலாயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு.....’

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘இந்த மூன்று சுகங்களில் எந்த சுகத்தை நீங்கள் பெரிய சுகமாக நினைக்கிறீர்கள்?’ என்று விக்கிரமாதித்தரைக்கேட்க, ‘அன்ன சுகத்தைத்தான்!” என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் மறுபடியும் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின்மேல் ஏறிக்கொண்டு விட்டது காண்க.... காண்க.... காண்க......