பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

சமையற்காரன் 'அதற்குள்ள மதிப்புக்கூட இந்த வீட்டில் நமக்கு இல்லையே!’ என்ற ஆத்திரத்தில் அவனை மேலும் கொஞ்சம் உற்சாகப்படுத்த, ‘அம்மா வீட்டில் இல்லையா? அப்படியானால் ஒன்றென்ன இரண்டாகவே போடுகிறேன்!' என்று அவன் மேலும் இரண்டு போட்டு அதை இழுத்துக் கொண்டு வெளியே செல்வானாயினன்.

வழியிலும் நாயர் சொன்னதை அந்த நாய் கேட்கவில்லை; அவன் அதை ஒரு பக்கம் இழுத்துக்கொண்டு சென்றால் அது அவனை இன்னொரு பக்கம் இழுத்துக் கொண்டு சென்றது. மீறி அவன் அதைத் தன் வழிக்கு இழுத்தால் அது 'வள், வள்’ என்று குரைத்தது. 'இது என்ன தொல்லை! இன்று என்ன வந்துவிட்டது இந்த நாய்க்கு?' என்று அவன் விழித்துக் கொண்டு நின்ற காலை, கேட்ட நேரத்தில் ‘ஆப்பிள் ஜூஸ்' கொண்டு வந்து கொடுக்கவில்லை என்பதற்காக கோபித்துக் கொண்டு அன்றைய ஷூஅட்டிங்கைக் 'கான்சல்' செய்துவிட்டு வந்த நவஸ்ரீ, அவனையும் அவனுடன் ஒத்துழைக்க மறுத்துக் கொண்டிருந்த தன் அருமை நாயையும் பார்த்துவிட்டு, ‘என்ன நாயர், என்ன நாய்க்கு?' என்று விசாரிக்க, ‘என்னவோ தெரியவில்லை அம்மா, இன்று என்னைக் கண்டதிலிருந்து அது குரைத்துக்கொண்டே இருக்கிறது!’ என்று அவன் கையைப் பிசைய, ‘ஏன், என்ன உடம்புக்கு?’ என்று பதறிய நவஸ்ரீ, தன்னை மறந்து சட்டென்று காரை விட்டுக் கீழே இறங்கி, 'எங்கே, அந்தச் சங்கிலியை இப்படிக் கொடு, பார்ப்போம்?’ என்று அவன் கையிலிருந்த சங்கிலியைத் தானே வாங்கிப் பிடித்துக்கொண்டு, ‘என்ன டார்லிங், என்ன?' என்று அதைத் தடவிக் கொடுத்துக்கொண்டே கொஞ்ச முயல, அதற்கும் இடம் கொடாமல் அது அவளைப் பார்த்தும் 'வள், வள்’ என்று குரைக்க, அதற்குள் தங்கள் அபிமான நட்சத்திரத்தை அபிமான நாயுடன் அங்கே பார்த்துவிட்ட ரசிக மகாஜனங்கள் 'வொய்ங், வொய்ங்’