பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

63

தெற்குப் பிராகாரத்தின் திருமாளிகைப் பத்தியில்தான் திலகவதியார் சந்நிதி. கற்சிலையில் உருவானவரைவிடச் செப்பு வடிவில் உருவாகியிருப்பவர்தான் நம் உள்ளம் கவர்கிறார். 'தம்பியார் உளர் ஆக வேண்டும் என்ற கருணையோடு, அம்பொன் மணிநூல் தாங்காது அனைத் துயிர்க்கும் அருள் தாங்கி இம்பர்மனைத் தவம் புரியும்' திருக்கோலத்திலேயே அவரைப் பார்க்கிறோம்.

இந்தத் தெற்குப் பிராகாரத்திலேயே அம்பிகை கோயிலும் இருக்கிறது. பெரிய நாயகி, திரிபுர சுந்தரி என்ற பெயர் தாங்கி நிற்கிறாள் அவள். தஞ்சைப் பெரிய நாயகியைப் போல் ஆறு, ஏழு அடி உயரம் இல்லையென்றாலும், நான்கு ஐந்து அடிக்குக் குறை வில்லை . திரிபுர சுந்தரியின் கோயில் வாயிலுக்கும் வெளியில் உள்ள முற்றத்திலிருந்து மூலக் கோயிலின் விமான தரிசனம் செய்யலாம். சோழர்கள் பெரு உடையார்க்குக் கல்லால் கட்டிய விமானம் போலவே மிக்க அழகாகச் சுதையில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த விமானம் எண் கோணத்தில் அமைந்திருக்கிறது. விமானம் அடித் தளத்திலிருந்து ஸ்தூபி வரை சிற்ப வடிவங்கள்தான். எல்லாம் சுதையால் ஆனவை. நல்ல வர்ணம் தீட்டப் பெற்றவை. இவைகளில் பிரசித்தமான வடிவம்தான் திரிபுராந்தகர் வடிவம், பன்னிரண்டு திருக்கரம். சூலம் ஏந்திய கை ஒன்று, வில்லேந்திய கை ஒன்று. ஒரு காலைத் தேர்த் தட்டிலும் மற்றொரு காலை உயர்த்தியும் வில் வளைத்து நிற்கிறார். கம்பீரமான தோற்றம். பார்த்துக் கொண்டே இருக்கலாம். இந்தச் சிற்ப வடிவத்தைக் கண்ட பின் கர்ப்பக்கிருஹ விமானத்தையே ஒரு சுற்றுச் சுற்றத் தோன்றும். விநாயகர், அவருடன் நிற்கும் தேவகணங்கள், கைலை மலையானும், அந்த மலையையே அசைக்கும் மன்னன் ராவணனும், இன்னும் கோவர்த்தனதாரி, அக்னி, ஏகபாத மூர்த்தி எல்லாம் நல்ல நல்ல வடிவங்களாகச்