பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

133


‘ஒஹோ! அப்பா?' என்றான் அவன்; ‘மாடியில் இருக்கிறார்!' என்றான் இவன்.

‘என்ன செய்துகொண்டிருக்கிறார் அவர்? தூங்குகிறாரா? இதோ போய் நான் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கட்டிவிட்டு வருகிறேன், பார்!' என்று கத்திக்கொண்டே அவன் மாடிக்கு ஓட, அவர் அங்கே ஆங்கில இசைத் தட்டு ஒன்றைக் கிராம போனில் வைத்துவிட்டு, அந்த இசைக்கேற்ப யாரோ ஒரு சீமாட்டியுடன் 'ராக் அண் ரோல்' நடன மாடிக்கொண்டிருக்க, மிஸ்டர் சாமுக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ, அவன் தன் ஆத்திரத்தை யெல்லாம் அக்கணமே மறந்து விழுந்து விழுந்து சிரிப்பானாயினன்.'

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘மிஸ்டர் சாம் ஏன் சிரித்தான்?' என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, 'தங்கை தவறு செய்தால் அம்மாவிடம் சொல்லலாம்; தம்பி தவறு செய்தால் அப்பாவிடம் சொல்லலாம். அம்மாவும் அப்பாவுமே தவறு செய்தால் யாரிடம் சொல்வது என்று நினைத்திருப்பான்; சிரிப்பு வந்துவிட்டிருக்கும்!' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின் மேல் ஏறிக் கொண்டு விட்டது என்றவாறு... என்றவாறு... என்றவாறு....

22

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

கனகாம்பரம் சிரித்த கதை

"விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன இருபத்திரண்டாவது கதையாவது: