பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

177

என்று இறைவனோடேயே உறவு கொண்டாட ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தப் பாட்டைப் படித்த நான் எண்ணுவதுண்டு: உண்மைதானே. பணக்காரரில் பணக்காரனாக இருக்கும் இறைவனே பின்னர் மிக்க எளியவனாகப் பிச்சைக்காரரில் பிச்சைக்காரனாகவும் இருக்கிறானே என்று. கற்பனை கற்பிக்கும் கடவுளாக உருப்பெற்றவர்கள்தான் எத்தனை எத்தனையோ பேர்? நடனராஜனாக, நீல கண்டனாக, சந்திரசேகரனாக, திரிபுராந்தகனாக, கஜ சம்ஹாரனாக, எல்லாம் இறைவனைக் கற்பனை பண்ணியிருக்கிறார்கள். அப்படிக் கற்பனை பண்ணிய கலைஞர்கள் தாம் பின்னர் பிக்ஷாடனாகவும் கற்பித்திருக்கிறார்கள்.

இப்படி இறைவனையே பிச்சைக் காரனாகக் கற்பனை பண்ணுவதற்கு எத்தனை துணிச்சல் இருக்க வேண்டும் இவர்களுக்கு. நாள் தவறாமல் நாம் இறைவனிடம் கேட்கும் பிச்சைகள் அனந்தம். பொன் வேண்டும், பொருள் வேண்டும், மண் வேண்டும், மனை வேண்டும், மக்கள் சுற்றம் எல்லாம் நிறைய வேண்டும் வேண்டும் எனத் தினசரி பிச்சைகேட்டு நிற்கும் மனிதன் அத்தனையும் கொடுக்கும் இறைவனையே பிச்சைக்காரனாகக் கற்பனை பண்ணுவது என்றால் அதை என்ன என்று கூறுவது? அப்படி அவன் நம்மிடம் என்ன பொருளைத்தான் பிச்சையாகக் கேட்கிறான்? நாமோ உள்ளத்தில் உறுதி இல்லாது இறைவனிடமிருந்து அகன்று அகன்றே ஓடுகிறோம். அவனோ அளப்பரிய கருணையோடு நம்மைத் தொடர்ந்தே வருகிறான். நம்மிடம் நமது அன்பைப் பிச்சை கேட்கிறான். அப்படி அன்பையும் ஆணவத்தையும் நம்மிடமிருந்து பெற்றுக் கொண்டு நமது வினைகளையெல்லாம் களைகிறான். சாயுஜ்ஜியத்தையே அருளுகிறான். 'சொல்லாதன எல்லாம் சொல்லி நம்மைத் தொடர்ந்து ஆட்கொண்டு பொல்லா வினை தீர்க்கும் புண்ணியனாக' அல்லவா உருப் பெற்று விடுகிறான் இந்த இறைவன். இப்படி ஒரு கற்பனை. இந்த அதீத கற்பனைக்கு ஒரு உருவம்

வே.மு.கு.வ -12