பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

187

விவரமும் தெரிந்து கொள்ள நாம் அம்பர் மாகாளம் என்னும் கோயிலுக்கே போக வேணும். அங்கேயே போகிறோம். இன்று.

அம்பர் பெருந்திருக்கோயில், கோயில் திருமாகாளம் என்று இரண்டு கோயில்கள் அடுத்தடுத்து இருக்கின்றன. தஞ்சை மாவட்டத்திலே மாயூரம், திருவாரூர் ரயில்வே லைனிலே பேரளம் என்னும் ஜங்ஷனில் இறங்கி, தென் கிழக்காக நாலு மைல் நடந்தோ வண்டியிலோ ஏறிச் சென்றால் கோயில் திருமாகாளம் என்னும் அம்பர் மாகாளம் போய்ச்சேரலாம். இன்னும் கொஞ்சம் ஆறு பர்லாங்கு நடந்து சென்றால் அம்பர் பெருந்திருக்கோயிலுக்கும் போகலாம். செல்கிறவர்கள் அவசரப்படாமல், சாவ தானமாக இரண்டு கோயில்களையும் பார்த்து விட்டுத் தான் திரும்ப வேணும். ஒன்றைப் பார்த்து ஒன்றைப் பார்க்கத் தவறி விடுதல் கூடாது. இக்கோயில்களுக்குச் செல்லுமுன் சோமாசிமாற நாயனார் சரிதத்தையும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேணும்.

அம்பர் என்ற திருத்தலத்திலே சோமாசிமாறர் என்ற அந்தணர் பிறந்து வளர்ந்து நல்ல சிவநேசச் செல்வராக வாழ்ந்து வருகிறார். பிரணவ மந்திரம் ஓதி ஓதி உயர்கிறார். அவர் திருவாரூர் சென்று தியாகேசனை வணங்கிய பொழுது, அங்கு வன்தொண்டராம் சுந்தருடன் இறைவன் தோழமை கொண்டு அவர் இட்ட ஏவலைச் செய்கிறார் என்பதையெல்லாம் கேட்டு அறிகிறார். இவருக்கும் ஒரு ஆசை பிறக்கிறது. 'நமக்கு இந்த இறைவன் அப்படி ஒன்றும் பெரிய தொண்டுகள் செய்ய வேண்டாம். நாம் செய்யும் யாகத்துக்கு நேரில் எழுந்தருளி அவிர்ப்பாகம் பெற்றுக் கொண்டால் போதும்' என்று நினைக்கிறார். இந்த ஆசையைச் சுந்தரரிடம் விண்ணப்பித்து, முடித்துக்கொள்ள நினைக்கிறார். அதற்காகப் பரவையாரிடம் 'சிபார்சு' பண்ணச் சொல்கிறார். அந்த அம்மையும் சுந்தரரிடம், சோமாசிமாறரது விருப்பதை நிறைவேற்றி வைக்க