பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


‘நீங்களா எஜமான்?' என்றான் காதர்.

'ஆமாம், நானேதான்! உன் மேலிருந்த சந்தேகம் இப்போதுதான் தீர்ந்தது எனக்கு. நீ உண்மையானவன்; யோக்கியமானவன்; உயிருக்குத் துணிந்து நீ என்னைக் காப்பாற்றுவதற்காகச் செய்த வீரசாகஸம் என்னால் என்றுமே மறக்க முடியாதது. இந்தா, இந்த நூறு ரூபாயை இப்போதைக்கு வைத்துக் கொள். அடுத்த மாதத்திலிருந்து சம்பளத்தில் பத்துரூபா கூட்டித் தரச் சொல்கிறேன். என்ன, சந்தோஷம்தானே?' என்று முதலாளி கேட்க, ‘இல்லை, எஜமான்; என்மேலே உங்களுக்கு எப்போது சந்தேகம் வந்து விட்டதோ, அதற்குப் பின் நான் இங்கே இருக்க விரும்பவில்லை, எஜமான்! நான் வரேன், எனக்கு உத்தரவு கொடுங்கள்!' என்று தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய எஜமானைத் தானும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டு, அவன் நடையைக் கட்டுவானாயினன்.'

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘இவர்களில் யார் செய்தது சரி? எஜமான் செய்தது சரியா, ஏவலாளன் செய்தது சரியா?' என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, 'இருவர் செய்ததும் சரியல்ல!' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விட்டது என்றவாறு... என்றவாறு... என்றவாறு......

8

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

கலியாணராமன்கள் கதை

விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன எட்டாவது கதையாவது: