பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

கொண்டு போய் வயற்காட்டில் வேலை செய்யும் தன் கணவனுக்குக் கொடுத்துவிட்டு வருவாள்.

இந்த விதமாகத்தானே வயலும் வரப்பும் போலவும், பயிரும் பச்சையும் போலவும் அவர்கள் இருவரும் இணை பிரியாமல் வாழ்ந்து வருங் காலையில், ஒரு நாள் மாலை வீடு திரும்பிய வீரப்பன் ‘மாட்டுக்கு வைக்கோலைப் போட்டு விட்டு எனக்குச் சோற்றைப் போடு!' என்று வழக்கம்போல் சொல்லிக் கொண்டே கை கால் கழுவிக் கொண்டு உட்கார, வழக்கத்துக்கு விரோதமாக எதையோ பறி கொடுத்ததுபோல் இருந்த அவள், மாட்டுக்கு முன்னால் சோற்றைக் கொண்டு போய் வைத்துவிட்டு, அவனுக்கு முன்னால் வைக்கோலைக் கொண்டு வந்து போட, ‘என்னடி, இன்று என்ன வந்து விட்டது உனக்கு?’ என்று அவன் சிரித்துக்கொண்டே கேட்க, ‘போய்ச் சேர வேண்டிய நாள் வந்துவிட்டது!’ என்று அவள் அலுப்பும் சலிப்புமாகச் சொல்லிக் கொண்டே சென்று, வைக்கோலையும் சோற்றையும் மாற்றி, அததை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பாளாயினள்.

‘சொல்லடி, இன்று என்ன உனக்கு?' என்று அவன் பின்னும் கேட்க, ‘ஆமாம், போங்கள்!’ என்று அவள் பின்னும் சிணுங்க, அந்த அழகிலே சொக்கிப்போன அவன், 'சிணுங்காதேடி! நீ சிணுங்கினால் என் புத்தி சோற்றின்மேல் போகாது போல் இருக்கிறது!’ என்று சிரித்துக்கொண்டே சொல்ல, அவள் அப்போதும் 'வேறு எங்கே போகுமாம்?' என்று முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு கேட்க, 'வேறு எங்கே போகும், உன் மேலேதான் போகும்!' என்று அவன் அவளைச் சீண்டிவிட்டுப் பின்னும் சிரிப்பானாயினன்.

‘சிரிக்காதீர்கள்! எனக்கு நெருப்பாயிருக்கிறது!’ என்று அவள் சீற, 'சரி, அழுகிறேன்!’ என்று அவன் 'ஊஊ’ என்று விளையாட்டுக்கு அழ, 'நீங்கள் ஏன் அழவேண்டும், நான் அல்லவா அழ வேண்டும்?’ என்று அவள் அவனை முந்திக் கொண்டு நிஜமாகவே அழுவாளாயினள்.