பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

21

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

சீமைக்குப் போன செல்வனின் கதை

"மறுபடியும் விக்கிரமாதித்தர் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன இருபத்தோராவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! ‘ஏழுமலை, ஏழுமலை' என்று ஓர் 'எஸ்டேட் ஏஜெண்ட்' ஏற்காட்டிலே உண்டு. 'மிஸ்டர் செவன் ஹில்ஸ், மிஸ்டர் செவன் ஹில்ஸ்' என்று தன் வெள்ளைக்கார முதலாளியால் அழைக்கப்பட்டு வந்த அவர், பின்னால் எப்படி அந்த எஸ்டேட்டுக்கே சொந்தக்காரரானார் என்பது அந்தப் பக்கத்தில் யாருக்குமே புரியாத புதிராக இருந்து வந்தது. 'இந்தியா சுதந்திரம் அடைந்ததும் வெள்ளைக்கார முதலாளி லண்டனுக்குப் போய்விட்டதுதான் அதற்குக் காரணம்' என்று சிலர் சொன்னார்கள்; 'அதெல்லாம் ஒன்றுமில்லை; மிஸஸ் செவன் ஹில்ஸின் முகராசிதான் அதற்குக் காரணம்' என்று வேறு சிலர் சொன்னார்கள். எப்படியோ மிஸ்டர் செவன் ஹில்ஸ் உயர்ந்தார்; அவருடைய அந்தஸ்தும் ‘ஏழுமலை' அளவுக்கு உயர்ந்தது!

மிஸ்டர் செவன் ஹில்ஸுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உண்டு. மூத்தவன் பெயர் முனிசாமி, அப்பாவைப் பின்பற்றி அவன் தன் பெயரை, 'எஸ்.எம். சாம்’ என்று மாற்றி வைத்துக் கொண்டான். இளையவன் பெயர் கோபாலன்; அவன் தன் பெயரை 'எஸ்.ஜி. பால்’ என்று மாற்றி வைத்துக் கொண்டான். பெண்ணின் பெயர் குப்பம்மாள்; அவள் தன் பெயரை 'எஸ்.கே. பம்மா' என்று மாற்றி வைத்துக் கொண்டாள்.