பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

249

கைப் பிடித்து அழைத்துச் செல்லும் போது நாணம் வந்து புகுந்து கொள்ளாதா அவள் அங்கங்களில்? தமிழரின் சிற்பக் கலை உலகிலே ஓர் அற்புதப்படைப்பு இந்த வடிவம்.

இதைப் பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே அங்குள்ள அர்ச்சகர் சொல்வார் 'இன்னும் கொஞ்சம் நடந்தால் திருமணஞ்சேரிக்கும் போய் வந்துவிடலாம்' என்று. 'என்ன? ஒரே திருமண மயமாக இருக்கிறதே இந்த வட்டாரம்?' என்று எண்ணுவோம். சந்தர்ப்பத்தை விட்டு விடாமலே மேலே நடக்கலாம். திருமணஞ்சேரிக்கு இரண்டு வழி. வேள்விக் குடியிலிருந்து இரண்டு மைல் மேற்கு நோக்கி நடக்கவேணும். நடக்கத்தான் வேண்டும். வண்டிகூடப் போகாது அந்தப் பாதையில். இடையில் வரும் விக்ரமன் ஆற்றையும் கடக்க வேணும். நடக்கவே இயலாது என்பவர்கள், வேள்விக் குடியிலிருந்து குத்தாலம் வரும் வழியில் இரண்டு மைல் வந்து விக்ரமன் ஆற்றைக் கடந்து எதிர்கொள்பாடி வழியாக இரண்டு மைல் செல்லவேண்டும். இரண்டாவது வழியிலேயே போகலாம் நாம். வழியிலுள்ள மேலைத் திருமணஞ்சேரி என்னும் எதிர்கொள்பாடியில் உள்ள ஐராவதேசுவரர், மலர்க்குழல் மாது அம்மையையும் வணங்கிவிட்டே செல்லலாம். வேள்விக் குடியில் திருமணம் செய்து கொண்டுதன் நகர் திரும்பிய அரச குமாரனை, அவனுடைய மாமனார் உருவில் எதிர்கொண்டு உபசரித்திருக்கிறார் இத்தலத்து இறைவன். அதனால் இத்தலமே எதிர்கொள்பாடி என்று பெயர் பெற்றிருக்கிறது. கோயிலிலே இப்போது திருப்பணி வேலை மும்முரமாக நடப்பதால் நம்மை எதிர்கொண்டு அழைக்க ஒருவருமே இருக்கமாட்டார்கள். நாமும் அதை எதிர்பாக்காமலேயே நடந்து கீழைத்திருமணஞ்சேரிக்கே சென்று சேரலாம். கோயில் பெரிய கோயில். இங்கு கோயில் கொண்டிருப்பவர் அருள் வள்ளல் நாயகரும், யாழின் மென்மொழி அம்மையும். இத்தலத்திலே மன்மதன்