பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

27

கோயில் கொண்டார்' என்று இரட்டையர்கள் பாட்டு நிலைத்து விடுகிறது. இன்றும் ஆறுமுன் ஓடிய நிலையும், இன்றைக்கு ஓடும் நிலையையும் காணலாம். எல்லாம் தெய்வத் தமிழ் செய்கின்ற காரியம்.

இத்தனை விவரங்களையும் தெரிந்தபின் இனி நாம் கோயிலுக்குள் செல்லலாம். இத்தலத்தில் கோயில்களை அமைத்திருப்பதில் ஒரு புதுமை. சோழ மன்னர்கள் கட்டிய கோயில்கள் பலவற்றில் இறைவன் கிழக்கு நோக்கியவராகவும், அவருக்கு இடப்பக்கம் தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பிகையும் இருப்பார்கள். சில இடங்களில் அன்னையை, இறைவனுக்கு இடப்பாகத்தில் கிழக்கு நோக்கியவராகவே நிறுத்தியிருக்கிறார்கள். பின்னர் நாயக்க மன்னர்கள் இடப்பக்கமிருந்த அம்பிகையும் வலப் பக்கத்துக்கே கொண்டு வந்திருக்கிறார்கள். இத்தனையும் இல்லாமல் இறைவனுக்கும் இறைவிக்கும் தனித்தனியாக ஒன்றை ஒன்று எதிர் நோக்கிய வண்ணம் கோயில்கள் கட்டியிருக்கிறார்கள் இங்கே. இறைவன் கிழக்கு நோக்கிய வராகவும் இறைவி மேற்கு நோக்கிய வண்ணமும் இருக்கிறார்கள். இறைவன் கோயில் வாயிலில் கோபுரம் இல்லை. அடிப்படை போட்டது போட்டபடியே நிற்கிறது. இறைவன் திருப்பெயர் அபிராமேசுவரர். அழகியநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இவரையே ஆமாத்தூர் அம்மான் என்று பாடிப் பரவுகிறார் திருஞான சம்பந்தர்.

புள்ளும் கமலமும் கைக் கொண்டார்
தாம் இருவர் உள்ளும் அவன் பெருமை
ஒப்பளக்கும் தன்மையதே

அள்ளல் விளை கழனி ஆமாத்தூர்
அம்மான் எம் வள்ளல் கழல் பரவா
வாழ்க்கையும் வாழ்க்கையே.

என்பது ஞானசம்பந்தர் தேவாரம். இந்த ஆமாத்தூர் அம்மான் சுயம்பு மூர்த்தி. பசுக்கள் வழிபாடு செய்த அடையாளமாகக்