பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

43

இந்தத் திருக்கோவலூர், பெண்ணையாற்றின் தென் கரையில் இருக்கிறது. விழுப்புரம் திருவண்ணாமலை ரயில் வழியில் விழுப்புரத்துக்கு மேற்கே இருபத்தைந்து மைல் தொலைவில் இருக்கிறது. ரயில் வழியாகவும், இல்லை ரோடு வழியாகவும் போகலாம். காஞ்சியைப் போல் இந்த ஊரும் இரண்டு பிரிவாக இருக்கிறது மேலூர், கீழூர் என்று. மேலூரில் கோயில் கொண்டிருப்பவர் திருவிக்கிரமன் என்னும் மகாவிஷ்ணு. கீழூரில் இருப்பவர் வீரட்டேசுரர் என்னும் சிவபெருமான். ஆம் அன்று கச்சியிலே முந்திக் கொண்டு அதிக இடத்தை வளைத்துக்கொண்டாரே அந்த ஏகம்பன். அதற்கு எதிர்ப்புக் காட்டுவதுபோல் பெருமாள் இங்கு முந்திக் கொண்டு, அதிக இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார்; பெரிய கோயிலைக் கட்டிக் கொண்டிருக்கிறார்; இதையெல்லாம் விட அந்தச் சிவனை ஆற்றங்கரைப் பக்கத்துக்கே ஒதுக்கி இருக்கிறார். ஊரிலே பெரிய உத்சவமெல்லாம் பெருமாளுக்குத்தான். ஆதலால் நாமும் முதலிலே பெருமாளையே தரிசித்துவிடலாம்.

இந்தப் பெருமாளின் சந்நிதி, வீதியின் கீழ்க் கோடியில், ஒரு பெரிய கோபுரம் பதினொரு நிலைகளோடு உயர்ந்திருக்கிறது. ஆனால் கோயிலின் பிரதான வாயிலில் ஒரு சின்னக் கோபுரம் தான். பெரிய கோபுரத்தை எட்டியிருந்து பார்த்து விட்டே, கோயில் வாசலுக்கு வந்து விடலாம். கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால் மங்கை மன்னன் கட்டிய கோபுர வாயில் வரும். அதனையும் கடந்தால் பாண்டியன் மண்டபம், பின்பு தான் மூலஸ்தானம். அங்கேதான் நிற்கிறார் உலகளந்த திருவிக்கிரமன், நல்ல நெடிய திருவுருவம். 'வியந்தவர் வெருக்கொள விசும்பின் 'ஓங்கிய' பெருமாள் அல்லவா? அதனால் விண்ணுற "நிமிர்ந்தே நிற்கிறார். மூலவர் திருவுரு, மரத்தால் ஆன வடிவம். முகத்திலே நல்ல வசீகரம் என்றாலும், தூக்கிய திருவடி அவ்வளவு இயற்கையாக இல்லை . திருவிக்கிரமன் பத்தினி (திருவிக்கிரமி) மிருகண்டு, மகாபலி எல்லோரும்