பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


‘மரகதம்; உம்மைப்போலவே அவளும் கிளி ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறாள்!'

'இந்தப் பிறவியிலும் அவளை நான் அடைய முடியுமா? அது சாத்தியமா?’ என்று அவன் கேட்க, 'முடியும்; இங்கிருந்து கிழக்கே ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றால்!’ என்றது கிளி.

அவ்வளவுதான்! அதற்குமேல் மாணிக்கம் தயங்கவில்லை; தாமதிக்கவில்லை. கிளிக் கூண்டைத் தூக்கிக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கி விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்துவிட்டான்.

மாணிக்கம் சரியாக மூன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்றதுதான் தாமதம், 'கிளி ஜோசியம் பார்க்கலையா, கிளி ஜோசியம்!' என்ற 'கிளிக் குரல்' அவன் காதில் விழுந்தது. ‘ஒருவேளை அவளும் என்னைத் தேடி மேற்கே வருகிறாளோ, என்னவோ?’ என்ற வியப்புடன் அவன் சுற்று முற்றும் பார்க்க, அவனைப் போலவே கையில் கிளிக் கூண்டுடன் ஒரு ‘கிளிமொழியாள்' அவனுக்கு எதிரே வந்து கொண்டிருந்தாள்!

‘என்ன ஆச்சச்சரியம்!' என்றான் அவன், அவளைப் பார்த்து.

‘என்ன ஆச்சச்சரியம்!' என்றாள் அவளும் அவனைப் பார்த்து.

‘உன் பெயர் மரகதம்தானே?' என்று அவன் அடக்க முடியாத ஆவலுடன் கேட்க, ‘ஆமாம்; உங்கள் பெயர் மாணிக்கம்தானே?' என்றாள் அவளும் அடக்க முடியாத ஆவலுடன்.

'ஆமாம், என் பெயரை உனக்கு யார் சொன்னது?' என்று அவன் அவளைக் கேட்டான்.

‘என்னுடைய கிளி!' என்று சொல்லிவிட்டு, ‘என் பெயரை உங்களுக்கு யார் சொன்னது?' என்று அவள் அவனைக் கேட்டாள்.