பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

33

உங்களில் யாரை அவள் மணந்து கொள்ள விரும்புகிறாளோ, அவருக்கு நான் அவளைக் கொடுத்து விடுகிறேன். என்ன, சரிதானா?'

‘சரி' என்று மூவரும் போய், மறுநாள் காலை அவன் கூடாரத்துக்கு வந்தனர்.

இருவர் வெளியே நிற்க, ஒருவன் உள்ளே போய், ‘ஜக்கம்மா!’ என்றான்; அவள் அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை.

மீண்டும் அவன், 'ஜக்கம்மா!’ என்றான் சற்று உரக்க.

அப்பொழுதும் அவள் அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை.

மூன்றாம் முறையாக, 'ஒ, ஜக்கம்மா!’ என்று அவன் தொண்டை கிழியக் கத்த, அப்பொழுதும் அவள் அவனைத் திரும்பிப் பார்க்காமல் செல்ல, 'சரியான செவிடு போலிருக்கிறது; இதைக் கட்டிக் கொண்டு யாரால் மாரடிக்க முடியும்?’ என்று அவன் எடுத்தான் ஒட்டம்!

அவனுக்கு அடுத்தாற்போல் இரண்டாமவன் வந்து, ‘ஜக்கம்மா!’ என்றான்.

அவள் திரும்பினாள்; 'என்னை மணக்க உனக்குச் சம்மதமா?’ என்றான் அவன்.

'பேபே பே பேபே!' என்றாள் அவள்!

‘இதென்னடா இழவு! இவள் ஊமையாயிருக்கிறாளே? என்னதான் அழகாயிருந்தாலும் இவளைக் கலியாணம் பண்ணிக்கொண்டு என்ன செய்வது?' என்று அவன் அவளைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் பிடித்தான் ஒட்டம்!

மூன்றாமவன் வந்து, 'ஜக்கம்மா!' என்றான் மெல்ல.

அவள் புன்னகையுடன் திரும்பினாள்.

‘என்னை மணக்க உனக்குச் சம்மதமா?’ என்றான் அவன்; 'சம்மதம்!' என்றாள் அவள்.

மி.வி.க -3