பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

317


அவர் கதை கேட்டார் விக்கிரமாதித்தர்; அவர் தன் மாமனாரிடம் சொல்லிவிட்டு வந்தது போலவே 'கொஞ்சம் பொறுங்கள், இதோ வந்து விட்டேன்!’ என்று சொல்லிக் கொண்டே எழுந்து வெளியே சென்றார். அடுத்த நிமிஷம் மிஸ்டர் விக்கிரமாதித்தருடன் வந்த அசல் போலீஸ்காரர்கள் இருவர் போலி போலீஸ்காரரைக் கைது செய்ய, 'ஐயோ, இதற்குத்தானா உம்மைத் தேடி வந்தேன்?' என்று கீலீஸ்காரர் அலற, 'இன்னொரு முறை நீங்கள் ஆள் மாறாட்டம் செய்து யாரையும் ஏமாற்றக் கூடாது பாருங்கள்; அதற்குத்தான் இந்தத் தண்டனை!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, அதற்குள் ‘மருமகப்பிள்ளை அத்தனை அவசரமாக எங்கே போகிறார்?’ என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலுடன் அவரைத் தொடர்ந்து அங்கே வந்த அவருடைய மாமனாரும், மாமனாரைத் தொடர்ந்து வந்த அவருடைய மனைவியும், ‘ஐயோ, இது என்ன அநியாயம்? போலீஸ்காரரைப் போலீஸ்காரரே கைது செய்வதா?’ என்று பதற, 'அவர் அசல் போலீஸ்காரர் இல்லை அம்மா, சினிமா போலீஸ்காரர்!’ என்று விக்கிரமாதித்தர் விளக்க, ‘அப்படியா சமாசாரம்? இருந்தாலும் அதற்காக இனி அவரைப் பிரிந்து வாடும் தண்டனையை எனக்கு நீங்கள் அளிக்கலாமா?' என்று அதற்குள் தன்னை ஒருவாறு சமாளித்துக்கொண்டு விட்ட பொன்னி புலம்ப, ‘ஏமாற்றுபவர்கள் மட்டும் தண்டனை அடைந்தால் போதாது; ஏமாறுபவர்களும் தண்டனை அடைய வேண்டும் என்பதற்காகவே அதை நான் பொருட்படுத்தவில்லை, அம்மா!' என்று சொல்லி விக்கிரமாதித்தர் அவளைச் சமாதானம் செய்து அனுப்பியதோடு, 'கவலைப் படாதீர், பெரியவரே! உம்மை அறைந்த உம் பக்கத்து வீட்டுக்காரரும் அடுத்தாற்போல் கைது செய்யப்படுவார்!’ என்று சொல்லி அவள் அப்பாவையும் சமாதானம் செய்து அனுப்பி வைப்பாராயினர்."