பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

135

பரசு பாணியர் பாடல் வீணையர்
பட்டினத்துறை பல்லவனீச்சுரத்து
அரசு பேணி நின்றார்
இவர் தன்மை யாரறிவார்?

என்று மயக்கமுற்றார்போல் தொடங்கி, செம்மேனி எம்மானாகிய சிவபெருமானது மேனி அழகினையும் இயல்புகளையும் விரித்தே சொல்கிறார். பவளமேனியர், திகழும் நீற்றினர், பண்ணில் யாழினர், பச்சைமேனியர், பிச்சைகொள்பவர், பைங்கண் ஏற்றினர், திங்கள் சூடுவர், பாதம் கைதொழ வேதம் ஓதுவர் என்றெல்லாம் பாடிப் பரவியபின் இந்த இறைவனைப் பற்றிச் சொல்வதற்கு வேறு ஏதேனும் மிச்சம் இருக்கவா போகிறது?

இந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டே நாமும் கோயிலுள் நுழையலாம். கோயிலின் வெளிப் பிராகாரத்திலே தெற்கு மதிலையொட்டி ஒரு சிறு கோயிலைக்கட்டி அங்கு பட்டினத்து அடிகளை இருத்தி யிருக்கிறார்கள். இது சமீபத்தில்தான் ஏற்பட்டிருக்கிறது. பட்டினத்துப் பிள்ளையார் என்பதனாலேயே அவர் இந்தக் காவிரிப்பூம்பட்டினத்துக்காரர் என்பதை அறிவோம். அவர் அந்தப் பட்டினத்திலே சிவதேயர் என்னும் தனவணிகரின் மகனாய்த் தோன்றுகிறார். பக்கத்திலேயுள்ள, திருவெண்காடரது பெயரையே தாங்குகிறார். நீண்ட காலமாகப் பிள்ளை இல்லாதிருந்து, கடைசியில் திருவிடை மருதூர் மருதவாணனையே குழந்தையாகப் பெறுகிறார். அந்த மருதவாணன் வளர்ந்து பெரியவனாகிய பின், ஒருநாள் தன் தாயாரிடத்து ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து விட்டு மறைந்து விடுகிறான். மனைவியிடம் இருந்த பெட்டியை வெண்காடர் வாங்கித் திறக்க. அதனுள்ளே ஓர் ஓலைச் சுருளும் ஒரு காதற்ற ஊசியும் இருப்பதைக் காண்கிறார். ஓலைச் சுருளை நீட்டிப் படித்தால் அதிலே 'காதற்ற ஊசியும்