பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

125


அதற்கும் காரணம் இல்லாமற் போகவில்லை. தம்பிக்குக் கலியாணம் என்று ஒன்று ஆனால், எப்படியும் பாகப் பிரிவினை என்று ஒன்று நடக்கும். அப்புறம் அவனுக்கு ஒரு கிராமம் இவனுக்கு ஒரு கிராமம் என்று பிரியும். அதற்கு மேல் தன்னை 'இரண்டு கிராமங்களுக்குச் சொந்தக்காரனின் மனைவி' என்று சொல்லி அவள் தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் பெருமையடித்துக் கொள்ள முடியுமா? ஒரே ஒரு கிராமத்துக்குச் சொந்தக்காரனின் மனைவி என்றுதானே சொல்லிக் கொள்ள முடியும்?-அந்தக் கவலை அவளுக்கு!

   வீட்டுக்காரிக்கு அந்தக் கவலை என்றால் ஊராருக்கோ தாங்கள் என்ன சொல்லியும் அந்தக் குடும்பம் இன்னும் தாங்கள் சிரிக்க இடம் கொடுக்காமல் இருக்கிறதே என்று ஓயாக் கவலை! அந்தக் கவலையைத் தீர்த்துக் கொள்வதற்காக அவர்கள் லட்சுமணனைச் சந்திக்கும்போதெல்லாம் 'அது என்னடாப்பா, அது? அண்ணன் என்ன சொல்லியும் நீ எனக்குக் கலியாணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயாமே? அவன் மட்டும் கலியாணத்தைப் பண்ணிக் கொண்டு 'ஜாம், ஜாம்’ என்று வாழவேண்டும்; நீ வெந்ததைத் தின்றுவிட்டு வெறும் பாயில் கிடந்து உருள வேண்டுமா? நன்றாயிருக்கிறதே நியாயம்! இரண்டு பெண்கள் சேர்ந்து இருக்க முடியாது என்பதற்காக நீ இன்னும் எத்தனை நாட்கள் இப்படி இருந்து கொண்டிருக்க முடியும்? இருக்கவே இருக்கிறது, ஒன்றுக்கு இரண்டு கிராமங்கள்; நீயும் அவனைப் போல் ஒரு கலியாணத்தைப் பண்ணிக்கொண்டு, உனக்கென்று ஒரு கிராமத்தைப் பிரித்து எடுத்துக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால் போச்சு!' என்று சொல்லி வந்தார்கள். அவனோ அதைக் கேட்டுக்கொண்டு சும்மா வருவதில்லை; 'ஏன், எங்கள் வீடு ஒரே வீடாயிருப்பது உங்களுக்குப் பிடிக்க வில்லையா? இரண்டு வீடுகளானால்தான் பிடிக்குமா?' என்று அவர்களையே திருப்பிக் கேட்டுவிட்டு வருவானாயினன்.