பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

61


‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! 'காதர், காதர்' என்று ஒரு காவற்காரன் இருந்தான். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வந்திருந்த அவன் நல்ல பலசாலி; சுறுசுறுப்பு மிக்கவன். எல்லாவற்றையும் விட நம்பிக்கையானவன்; உண்மையானவன்.

இளம் தொழிலதிபர் ஒருவர் அவனைத் தம் வீட்டுக்கு இரவு காவற்காரனாகப் போட்டிருந்தார். ஒரு நாள் இரவு நேரம் கழித்து வந்த அவர், ஏழெட்டு முறை 'ஹாரன்’ அடித்தும், காதர் கேட்டைத் திறந்து விடாமல் ஏதோ யோசித்தது யோசித்தபடி, தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். வந்துவிட்டது கோபம் முதலாளிக்கு. காரை நிறுத்திவிட்டு இறங்கிப்போய் அவனைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கி, ‘என்ன, தூங்குகிறாயா?' என்று அதட்டலானார்.

‘இல்லை, எஜமான்! என் வாழ்க்கையில் இன்று எனக்கு ஒரு பெரிய சோதனை! காலத்தோடு கலியாணம் செய்து வைக்காததால், நேற்றிரவு என் பெண் ஒருத்தி யாரோ ஒருவனுடன் ஓடிவிட்டாள். அதை நினைத்துத்தான் இப்போது நான் துக்கப்பட்டுக் கொண்டிருந்தேன்’ என்று கண்ணில் நீருடன் அவன் சொல்வானாயினன்.

‘அந்தத் துக்கத்தை யெல்லாம் இனிமேல் நீ உன் வீட்டிலேயே மூட்டை கட்டி வைத்துவிட்டு வந்துவிடு; இங்கே எடுத்துக்கொண்டு வராதே!' என்று முதலாளி விறைப்புடன் சொல்லிவிட்டுக் கேட்டைத் தாமே திறந்துகொண்டு மீண்டும் காரில் ஏறி உட்கார்ந்து, உள்ளே செல்வாராயினர்.

மறு நாள் இரவு; நேற்று நடந்த தவறு இன்றும் நடந்து விடக் கூடாதே என்பதற்காகக் காதர் வேறொன்றைப் பற்றியும் நினைக்காமல், முதலாளியையும், முதலாளியின் கார் ஹாரன் சத்தத்தையும் மட்டுமே நினைத்தவாறு கேட்டுக்கருகே உட்கார்ந்திருப்பானாயினன்.