பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

இப்படியெல்லாம் நடந்தாலும் இப்போது ஆச்சரியப் படுவதற்கில்லை!’ என்று தகப்பனார் தம் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்காருவாராயினர்.

‘அவன் என்ன ஜாதியோ, இழவோ தெரியவில்லையே? ஒரே ஜாதியாயிருந்தாலும் மானம் போவதற்கு முன்னால் மூன்று முடிச்சைப் போட்டு விட்டுவிடலாம்' என்று தாயாகப்பட்டவள் சொல்ல, 'அதற்கும் பதினெட்டு வயதாவது ஆக வேண்டாமா? எதற்கும் உன் மகளைக் கேட்டுப் பார், அவன் என்ன ஜாதி என்று?' 'அவன் என்ன ஜாதியடி?’ என்று மகளைக் கேட்க, அவள் 'இப்படியும் ஒரு முண்டம் இருக்குமா?’ என்பதுபோல் தன்னை மட்டுமே புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு 'களுக்'கென்று சிரிக்க, தாயார் ஒன்றும் புரியாமல், ‘என்னடி, சிரிக்கிறாய்?' என்று கேட்க, ‘ஜாதி மதத்தையெல்லாம் பார்த்துக்கொண்டு காதல் பிறப்பதில்லை அம்மா, காதல் பிறப்பதில்லை!' என்பதாகத் தானே, தான் படித்த கதைகளிலிருந்தும், பார்த்த சினிமாக்களிலிருந்தும் கண்ட உண்மையை அவள் பளிச் சென்று எடுத்துச் சொல்ல, 'அப்படியென்றால் அவன் ஒரு ஜாதி, நீ ஒரு ஜாதியா?' என்பதாகத்தானே தாயார் மேலும் ஒரு ‘பிற்போக்குக் கேள்வி'யைக் கேட்டு வைக்க, 'ஆமாம், ஆமாம், ஆமாம்!' என்று அவள் தன் 'முற்போக்குப் பதி'லை ஒரு முறைக்கு மும்முறையாகச் சொல்லி வைப்பாளாயினள்.

இதைக் கேட்டதும், 'நடக்காது; இந்தக் கலியாணம் என் உயிருள்ளவரை நடக்கவே நடக்காது!’ என்று தகப்பனார் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொண்டே ஒரு துள்ளுத் துள்ளி எழுந்து நிற்க, 'நடக்காவிட்டால் என்னை நீங்கள் உயிரோடு பார்க்க முடியாது!’ என்று மகளும் அழுத்தம் திருத்தமாக ஒரு விள்ளு விள்ளிச் சொல்லி, அவரைப் பயமுறுத்துவாளாயினள்.

‘இப்படிப்பட்ட பெண்ணை உயிரோடு பார்ப்பதும் ஒன்றுதான்; உயிரில்லாமல் பார்ப்பதும் ஒன்றுதான்!' என்று