பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

45

சுருக்குப் போட்ட கயிறு அல்ல; கெட்டி முடி போட்ட கயிறு. இதோ பார்த்தாயா?' என்று அய்யாமுத்து அந்த முடிகளை அவளுக்கு இழுத்து இழுத்துக் காட்டிச் சிரிக்க, 'எல்லாம் மாரியாயியின் மகிமை!' என்று மகிழம்பூ மகிழ்ந்து, மாரியாயியை நினைத்துத் துதிக்கலாயினள் என்றவாறு.... என்றவாறு.... என்றவாறு......’

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘இவர்களில் யார் புத்திசாலி?’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘சந்தேகமென்ன, மதுரைதான்! ராவணனிடமிருந்த சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யச் சொல்லி ஏற்றுக் கொண்ட ராமனைப்போல, தன்னை விட்டு ஆறு மாதம் ஒதுங்கியிருந்த தன் மனைவியைத் தூக்குக் கயிற்றில் கழுத்தைக் கொடுக்கச் சொல்லி ஏற்றுக்கொண்டு விட்டானல்லவா?’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின் மேல் ஏறிக்கொண்டுவிட்டது காண்க.... காண்க... காண்க....

6

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

கிளிக் கதை

விக்கிரமாதித்தன் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன ஆறாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! 'மாணிக்கம், மாணிக்கம்' என்று ஒரு கிளி ஜோசியன் இருந்தான். அவனுக்கு இந்த ஊர், அந்த ஊர் என்று இல்லை; எல்லா ஊரும் அவன் ஊர்தான். கையில் கிளிக்கூண்டைத் தூக்கிக் கொண்டு, ‘பட்சி ஜோசியம்