பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

வாடகைக்கு எடுத்துக்கொண்டு மலரும் மணமும் போல, நகையும் நங்கையும்போல, அதுபோல இதுபோல, இன்னும் என்னென்னவோ போல வாழ்ந்து வந்தோம். அங்ஙனம் வாழ்ந்து வந்தகாலை எந்த விதமான தவமும் செய்யாமலே எங்களுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. அந்த மகவுக்கு இன்னும் எண்ணி ஆறு மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் என் மனைவி காணாமற் போய்விட்டாள் ஐயா, காணாமற் போயே போய்விட்டாள்!'

இவ்விதமாகத்தானே அவர் மனைவி காணாமற் போன கதையைச் சொல்லிக்கொண்டு வந்தகாலை, துக்கம் வழக்கம்போல் வந்து அன்னார் தொண்டையை அடைக்க, அதைக் கண்ணிரால் கரைத்து வெளியேற்றுவதற்காகவோ என்னவோ, அவர் தன் கதையை நிறுத்திவிட்டு ‘ஓ'வென்று அழுது புலம்ப, 'அழாதீர்கள் ஐயா, அழாதீர்கள்!’ என்பதாகத் தானே விக்கிரமாதித்தர் அவரைத் தேற்றி, 'என்றிருந்து காணவில்லை, எப்பொழுதிருந்து காணவில்லை?' என்று அன்னார் முதுகைத் 'தடவு, தடவு' என்று தடவிக் கொடுத்துக் கொண்டே கேட்க, ‘என்னத்தைச் சொல்வேன், நான்? இன்றிலிருந்துதான் அவளைக் காணவில்லை ஐயா, இன்றிலிருந்துதான் அவளைக் காணவில்லை. காலை மணி ஒன்பது இருக்கும். வழக்கம்போல் எனக்குச் சமைத்துப் போட்டாள். சாப்பிட்டுவிட்டு நான் வேலைக்குப் போனேன். அங்கே சர்வ வல்லமையுள்ள யாரோ ஒரு தொழிலாளி, 'இந்த வருடம் முப்பது சதவிகிதம் போனஸ் கிடைக்குமா, நாற்பது சதவிகிதம் போனஸ் கிடைக்குமா?' என்று நினைத்துக் கொண்டிருந்தகாலை முதலாளி 'அச்’ என்று ஒரு தும்மல் தும்ம, 'நான் போனஸைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த காலை நீங்கள் எப்படித் தும்மலாம்? வாபஸ் வாங்கினால் தான் ஆச்சு!' என்று தொழிலாளி தன் முஷ்டியை உயர்த்த, ‘இதென்ன வம்பு? நான்தான் தும்மிவிட்டேனே! அதை எப்படி வாபஸ் வாங்குவேன்? இன்னொரு முறை வேண்டுமானால் தும்மச் சொல்; யாரிடமிருந்தாவது ஒரு சிட்டிகை