பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

உங்களைத் தொட்டால் உங்களுக்கு ‘ஷாக்' அடிப்பதுபோல் இல்லையா?' என்று அவள் கேட்க, ‘இல்லை' என்று அவர் சொல்ல, 'சரி தொலையட்டும்; பூமி உங்களை விட்டுக் கீழே கீழே நழுவுவது போலாவது இருக்கிறதா?’ என்று அவள் பின்னும் கேட்க, ‘இல்லை' என்று அவர் பின்னும் சொல்ல, ‘சரி தொலையட்டும்; ஆகாயத்தை நோக்கி மேலே மேலே போவது போலாவது இருக்கிறதா?’ என்று அவள் பின்னும் கேட்க, ‘இல்லை' என்று அவர் பின்னும் சொல்ல, ஆத்திரம் கொண்ட அவள் அவரை நறுக்கென்று கிள்ளிவிட்டு, ‘இப்போது உங்களுக்கு வலிக்கவாவது வலிக்கிறதா? அதையாவது சொல்லித் தொலையுங்கள்!’ என்று கேட்க, அதற்கும் அவர், 'இல்லை, இல்லவே இல்லை!’ என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்லவே, பொறுமை இழந்த அவள், ‘போயும் போயும் உங்களை நான் காதலிக்க வந்தேனே? நிறுத்துங்கள் காரை, இறங்கிக் கொள்கிறேன்!' என்று சொல்லிக் காரை நிறுத்தி, அக்கணமே இறங்கிக் கொள்வாளாயினள்.

கவர்ச்சிக் கன்னி காரை விட்டு இறங்கியதும் காளையொருவன் துள்ளி ஓடி வந்து, 'என்ன, வெற்றிதானே?' என்று அவள் தோளை உரிமையுடன் தட்டிக் கேட்க, 'வெற்றிதான்! ஆனாலும் நான் கார் மோகினி என்பது அந்த விக்கிரமாதித்தருக்கு எப்படியோ தெரிந்துவிட்டிருக்கிறது; ரொம்ப உஷாராயிருந்தார். நானா விடுவேன்? அவர் கழுத்தைக் கட்டி வளைத்து, அவருடைய கோட்டுப் பையிலிருந்த பர்ஸை அப்படியே 'அபேஸ்' செய்து விட்டேன்!’ என்று சொல்லிக் கொண்டே வெற்றிப் பெருமிதத்துடன் அவள் விக்கிரமாதித்தரிடமிருந்து பறித்த பர்ஸை எடுத்து அந்தக் காளையிடம் கொடுக்க, அதை வாங்கி ஆவலுடன் திறந்து பார்த்துவிட்டு, 'பலே கெட்டிக்காரர் என்று அவரைச் சும்மாவா சொல்கிறார்கள்? அவர் இதில் என்ன எழுதி வைத்திருக்கிறார், பார்த்தாயா?' என்று சொல்லிக்கொண்டே அவன் அதற்-